வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் டிச.27ல் தொடக்கம்-ஜனவரி 6ல் சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் டிசம்பர் 27ஆம் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. வரும் ஜனவரி 6ஆம் தேதியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுடன் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவமும் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வைணவ ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில். மேலும் மார்கழி மாதத்தில் பாடப்படும் திருப்பாவை அருளிய ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம். அதோடு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் அவதரித்த புனித பூமி.
ஸ்ரீஆண்டாள், இக்கோவிலில் சயன திருக்கோலத்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை நினைத்து தான் திருப்பாவையை இயற்றியுள்ளார். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அதோடு, தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட கோபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தான்.
ஆண்டாள் மாலை
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களில் முக்கியமான கோவில். திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள், மற்றும் மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு என அனைத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தான் முதல் மரியாதை. அவர் அணிந்து தரும் மாலையை அணிவித்த பின்பு தான் எந்தவொரு பூஜையும் நடக்கும்.
மார்கழி திருப்பாவை
அதுமட்டுமல்ல, 108 திவ்ய தேசங்களிலும் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள் ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இல்லாமல் நடைபெறாது என்பது தனிச்சிறப்பு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 27ஆம் தேதியன்று பகல்பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் மாலை 5 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் எழுந்தருளி பச்சை பரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
சொர்க்கவாசல் திறப்பு
தொடர்ந்து தினந்தோறும், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு ஜனவரி 6ஆம் தேதியன்று நடைபெறும்.
ஜனவரி 6ஆம் தேதியன்று பெரிய பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடைபெறும்.
ஆண்டாள் ரங்கமன்னார்
பின்னர், ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் நடைபெறும். இதில் நாள்தோறும் இரவு 7 மணியளவில், ஸ்ரீஆண்டாள் மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதிகளைச் சுற்றி வந்து பெரியபெருமாள் சன்னதியில் எழுந்தருளுவார். அங்கு, திருவாராதனம், அரையர் வியாக்யானம், பஞ்சாங்கம் வாசித்தல், சேவாகாலம் என மறுநாள் அதிகாலை 5.30 மணி வரையிலும் ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும்.
ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவத்தில், நாள்தோறும் காலை 10 மணிக்கு ஸ்ரீஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்துருளுகிறார். பின்பு, பிற்பகல் 3 மணிக்கு எண்ணெய் காப்பு சேவை நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் களைகட்டி வருகின்றன.