For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பூலோக வைகுண்டத்தில் ஜன.6ல் சொர்க்கவாசல் திறப்பு

Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் டிசம்பர் 26ஆம் தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலை 4.45 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் சொர்க்க வாசலைக் கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது.

திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார். நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கத்தின் பெருமை

ஸ்ரீரங்கத்தின் பெருமை

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும், வைணவ மரபின் தலைநகரம் என்றும், வைணவ கோவில்களிலேயே மிகப்பெரிய கோவில் என்றும் போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோவில். சுமார் 600 பரப்பளவில் பரந்து விரிந்து, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் மாலை போல் சூழப்பட்டு ஒரு குட்டி தீவு போல் காட்சியளிக்கும் கோவில் இது.

சயன கோலத்தில் பெருமாள்

சயன கோலத்தில் பெருமாள்

மற்ற அனைத்து வைணவ கோவில்களில் எல்லாம் வடதிசையை நோக்கியவாரு சயன கோலத்தில் வீற்றிருக்கும் மஹாவிஷ்ணு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மட்டும் தென்திசையை நோக்கி சயன கோலத்தில் வீற்றிருப்பார். இதற்கு காரணம் இலங்கையை ஆண்ட விபீஷயன் தான். விபீஷணனின் விருப்பத்தை நிறைவேற்றவே, மஹாவிஷ்ணு தென்திசையை நோக்கியவாறு உள்ளார்.

ஸ்ரீரங்கநாதரின் பெருமை

ஸ்ரீரங்கநாதரின் பெருமை

குடதிசை முடியை வைத்து குணதிசைபாதம் நீட்டி
வடதிசை பின்புகாட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக் குருகுமாலோ என்செய்கே னுலகத்தீரே

என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பற்றி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலாவது திவ்யபிரபந்தத்தில் போற்றிப் பாடிய பாடலாகும். இக்கோவிலில் தினந்தோறும், ஏதாவது ஒரு திருவிழா தான் என்றாலும், மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வும் தான் அனைத்திலும் உச்சம். இந்நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

ஸ்ரீரங்கத்தில் திருவிழா

ஸ்ரீரங்கத்தில் திருவிழா

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 26ஆம் தேதியன்று திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு கோவில் கர்ப்ப கிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பாகும். இரவு 7.45 மணி முதல் இரவு 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம், அபிநயம், வியாக்யானம் நடைபெறம். அன்றிரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெறும். பின்பு இரவு 10 மணி முதல் 10.30 மணி வரையிலும் திருவாராதனமும் நடைபெறும்.

அரையர் சேவை

அரையர் சேவை

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் தொடக்கமாக பகல்பத்து உற்சவம் வரும் 27ஆம் தேதியன்று தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7 மணியளவில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காலை 7.45 மணியளவில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார். காலை 8.45 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும் அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெறும். பகல் பத்து உற்சவம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும். நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும்.

நம்பெருமாள் எழுந்தருளல்

நம்பெருமாள் எழுந்தருளல்

ஜனவரி 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு ஜனவரி 6ஆம் தேதியன்று நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தனத்தில் இருந்து புறப்படுவார். அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும். நம்பெருமாள் பரமபா வாசலைக் கடந்து திருமாமனி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

அதைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் ராப்பத்து உற்சவம் நடைபெறும். இதில் திருக்கைத்தல சேவை வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வரும் ஜனவரி 13ஆம் தேதியன்று நடைபெறும். வரும் 15ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுடன் ராப்பத்து உற்சவமும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் நிறைவடைகிறது.

English summary
Vaikuntha Ekadashi Festival at Srirangam Sri Ranganatha Swamy Temple, known as Bhooloka Vaikuntam, begins on December 26th with the Thirunedunthandakam. The main event of the festival, the Sorga Vasal, is scheduled for January 6th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X