வரலட்சுமி விரதம் 2019: மகாலட்சுமியின் அருள் கிடைக்க நோன்பு கயிறு கட்டும் நல்ல நேரம்
வரலட்சுமி விரதம் என்பது 16 வகை செல்வங்களுக்கும் ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கிய விரதம் ஆகும். இந்த நாளில் நோன்பு கயிறு கட்டுவதற்காக நல்ல நேரத்தை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
மதுரை: வரலட்சுமி விரதத்தை முறையாக கடைபிடித்து பூஜை செய்பவர்களின் இல்லங்களைத் தேடி அன்னை மகாலட்சுமி வருகிறாள். அன்னை மகாலட்சுமி காலடி எடுத்து வைக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும். வரும் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள்.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு முழுவதும் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து குங்குமம், பூ உள்ளிட்டவற்றை பெண்களுக்கு கொடுத்து வணங்கி வழிபாடு நடத்துவார்கள். அன்றைய தினம் பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர்களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.
கெட்டி மேளம் கொட்டலையா... தோஷங்கள் நீங்கி முந்தானை முடிச்சு போட முத்தான பரிகாரங்கள்
வளம் தரும் வரலட்சுமி
வயதானவர்களை மதிப்பவர்களுக்கும், தாய் தந்தையருக்கும், மாமனார்,மாமியாருக்கும் சேவை செய்பவர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வரலட்சுமியை மனதார துதிப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்யம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.
விரதம் அனுஷ்டிப்பது எப்படி
வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலம் இட்டு,அதன் மீது ஒரு வாழை இலையில் ஒரு படி அரிசியை பரப்பி வைக்க வேண்டும். பித்தளை(அ)வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு,1ரூ நாணயம், எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள செம்பே கலசம் எனப்படும். வாய்ப்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும்
ஐஸ்வர்யம் தருவாய் தாயே
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம் வாசளுக்கு அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும் மறுநாள் வரலட்சுமி விரதம் அன்று விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து பூஜிக்க வேண்டும்.
நோன்புக்கயிறு கட்டுதல்
மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆதரித்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவரிடம் கொடுத்தோ(அ)மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும். பூஜைக்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் கட்டி விட வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை தூவி வழிபட வேண்டும்.
வரம் தரும் வரலட்சுமி
சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்பிகையை எண்ணி உணவழித்து வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுத்து உபசரிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை நமக்கு தருகிறாள் நம் தாய். சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வங்குபவர்களுக்கும் அன்னை மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
நோன்பு கயிறு நல்ல நேரம்
வெள்ளிக்கிழமையன்று நோன்புக்கயிறு கட்ட நல்ல நேரம் சுக்கிர ஓரை, குரு ஒரையில் நோன்புக்கயிறு கட்டலாம். காலையில் 6 மணிமுதல் 7 மணிவரை சுக்கிர ஓரை, 9 மணி முதல் 10.30 மணிக்குள் குரு ஓரையிலும் கட்டலாம். பிற்பகலில் ராகு காலம் முடிந்து சூரிய ஓரை சுக்கிர ஓரையும் நோன்புக்கயிறு கட்டலாம். பூஜை செய்த என்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ எளிமையான பூஜை செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய், ப்ச்சரிசி வைத்து விட்டு மறு வெள்ளியன்று பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வச் செழிப்பு பெருகும் என்றும் நிறைந்திருக்கும்.