வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் - தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
அஷ்ட சக்திகளை வாரி வழங்கும் மகா வரலட்சுமி விரதம் நேற்று வெள்ளிக்கிழமை தமிழகத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்பட்டது.
மதுரை: அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை,செல்வம், பூமி, கல்வி, ஆகிய எட்டு ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் விரதம் வரலட்சுமி விரதம்.
நேற்றைய தினம் இந்த விரதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த விரதத்தினையொட்டி நாடெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி. வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வம், திருமண வரம், குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசைக்குப் பின்னர் வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
வரலட்சுமி விரதம்
வீடுகளிலும் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. வீடுகளில் கலசம் வைத்து மகாலட்சுமி போல உருவம் அலங்கரித்து வழிபாடுகள் நடைபெற்றது. சிறு குழந்தைகள், கன்னிப்பெண்கள், திருமணம் ஆன சுமங்கலிப்பெண்கள், மூத்த குடிமக்களும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், துணி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
முதியவர்களிடம் ஆசிர்வாதம்
சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் பெருகும். சிறு குழந்தைகளுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. வயதில் மூத்த சுமங்கலி பெண்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து அவர்களிடம் அனைவரும் ஆசி பெற்றுக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்சானூரில் வரலட்சுமி பூஜை
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத விழா வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும், நேற்று இவ்விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வெகு சிறப்பாக நடத்தினர்.
தங்க ரதத்தில் அம்மன் பவனி
வரலட்சுமி பூஜையை முன்னிட்டு ஆஸ்தான மண்டபத்தில் உற்சவ தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கலச பூஜை செய்யப்பட்டது. மேலும், பல வித பூக்கள், துளசி, தவனம் போன்றவற்றால் அர்ச்சனை செய்தனர். மாலை, தங்க ரதத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரை, திரளான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரலட்சுமி விரத விழாவினையொட்டி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாங்கல்ய தோஷம் நீங்கும்
பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.