விஜயதசமி வித்யாரம்பம் - கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த மக்கள்
விஜயதசமியை முன்னிட்டு கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை ஆரம்பித்தனர்.
சென்னை: நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர்.
விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.
மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
இதனையொட்டி சென்னை மயிலாப்பூரில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர்.
இந்தியாவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில மட்டுமே உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு பாடல் பாடப் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கினர். சிறு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பச்சரிசியில் அச்சரம் எழுதி பழக்கினர்.