மக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்
மதுரை: மழை வளம் குறைந்து தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது வருணபகவான் மனது வைக்க வேண்டும் அதற்கு கடவுளை வேண்டுங்கள் யாகம் நடத்துங்கள் என்று அரசாங்கமே கூறிவிட்டது. ஆண்டவன் சோதனையா? அல்லது ஆண்டவர்கள், ஆள்பவர்களின் திறமையின்மையா என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். விகாரி ஆண்டில் மக்கள் குடிநீருக்கு அலைவார்கள். குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தாகத்தில் தவிப்பார்கள் என்று விகாரி வருடத்திய பஞ்சாங்கத்தில் முன்பே கணித்துள்ளது.
விகாரி ஆண்டில் பருவமழைக் காலமான ஆனி மாதம் தொடங்கி மார்கழி வரை மழை பெய்வதற்கான நாட்களையும், அந்த நாட்களில் மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் 25, ஜூலை 24, ஆகஸ்ட் 23, செப்டம்பர் 21,அக்டோபர் 6, அக்டோபர் 19, நவம்பர் 17, டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்தால் நல்லது என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு " என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளூவர் நீரின் தேவையைப் பற்றி எழுதி வைத்துள்ளார். கடந்த 2015 நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதை தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்தேக்கங்களும் அணைகட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.
தண்ணீரின் முக்கியத்துவம்
தற்போதைய சூழலில் நம்முடைய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் என்பது பல இடங்களில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பல வண்ண காலி குடங்களுடன் மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். நிலத்தடி நீர்வளத்தை நாம் எவ்வாறு அதிகரித்து கொள்வது உரிய மழை பெய்யும் தருணத்தில் நாம் அந்த மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலமும் அணைகளில் நீரை தேக்கிவைத்து கொள்வதன் மூலமும் நீர்வளத்தேவைகளில் தன்னிறைவு பெற முடியும்.
பருவமழை பற்றாக்குறை
2016ஆம் ஆண்டு வர்தாபுயல் வந்தாலும் மழை இல்லை. புயல்காற்று வீசி மரங்களை மட்டுமே வேரோடு சாய்த்து விட்டது. அதன்பிறகு ஏரிகள் நிறையவே இல்லை. 2017ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை பற்றாக்குறையாகவே இருந்தது. 2018ல் பருவமழை மொத்தமாக கைவிட்டு விட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகள், குளங்கள் மொத்தமும் வறண்டு விட்டது.
குடிநீர் பஞ்சம் வரும்
பாரவிகாரிதனில் பாரணநீருக்குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரர்
பயமதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியவுடமை விற்றுண்பார் தேர்.
விகாரி வருடத்தில் மக்கள் குடிநீருக்கு அலைவார்கள். குடிநீர் பஞ்சம் ஏற்படும் மக்கள் தாகத்தில் தவிப்பார்கள். பருவமழை பெய்யாமல் ஏமாற்றமே மிஞ்சும். விவசாயம் குறைந்த அளவிலேயே நடைபெறும். மக்களுக்கு கள்வர் பயம் ஏற்படும். முன்னோர்கள் பாடுபட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை விற்று சாப்பிடும் நிலை ஏற்படும் என்று வெண்பாவில் எழுதியுள்ளது.
வறட்சியும் வெள்ளமும்
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளம், வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், கேரளா வெள்ளம் என பல மாதங்களுக்கு முன்பே கணித்துள்ளது பஞ்சாங்கம். கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்தே பஞ்சாங்கத்தில் கணிக்கப்படுகிறது. விகாரி ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தாகத்தில் தவிப்பார்கள் என்றும் கணித்துள்ளது பஞ்சாங்கம்.
பருவமழை எப்படி
பருவமழை சரியான அளவில் பெய்தால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். இல்லாவிட்டால் தலைநகரத்தை விட்டு சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 7ஆம் தேதி அதாவது ஜூன் 22ஆம் தேதி அவர் திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் தருணத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
அற்பமழை
அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் வெயில் மண்டையை பிளக்கிறது. பல பகுதிகளில் அனல் காற்றும் வீசுகிறது. இதற்குக் காரணம் இந்த ஆண்டு ஜேஷ்ட சுத்த பிரதமை செவ்வாய்கிழமை பிறப்பதுதான். அற்பமழையும், அனல்காற்றும் வீசும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. மழை எப்போ வரும் தாகம் எப்போது தீரும் என்று மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். வருணபகவான் மனது வைத்தால் மட்டுமே தண்ணீர் பஞ்சம் தீரும்.