ஈஸ்டர் நாளில் தேவாலயத்தில் பிரச்சினை... பஞ்சாங்கத்தில் முன்னாடியே கணிச்சிருக்காமே!
ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தில் பிரச்சினை ஏற்படும் என்று விகாரி வருஷத்திய வாக்கிய பஞ்சாங்கம் எச்சரித்திருந்தது.
மதுரை: பஞ்சாங்கம் கணிப்பு சில நேரங்களில் பலித்து விடுகிறது. சென்னை வெள்ளம், புயல், தீ விபத்து, நிலநடுக்கங்களை கணித்துள்ளது. கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து முன்னோர்கள் கணித்து எழுதுகின்றனர். பஞ்சாங்க கணிப்பு பல நேரங்களில் பலித்தாலும் சில நேரங்களில் பொய்த்து விடுகிறது. விகாரி வருட வாக்கிய பஞ்சாங்கத்தில் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயத்தில் பிரச்சினை ஏற்படும் என்று கணித்துள்ளது. அதே போல இலங்கையில் தேவாலயத்தில் குண்டு வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
விகாரி பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு மழை எப்படியிருக்கும் என்றும் வெயில் பற்றியும், எத்தனை புயல்கள் உருவாகும் என்றும் கணித்துள்ளது. இந்த சித்திரை மாதத்தில் என்னென்ன சம்பவங்கள் நிகழும் என்றும் கணித்துள்ளது. தேவாலயத்தில் தீ விபத்து ஏற்படும் என்றும் மெரீனாவில் கலவரம் வெடிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதி திடீர் மழை ஆறுகளில் வெள்ளம் இடி முழக்கத்துடன் கனமழை என்று கணித்திருந்தது. அதே போல கடந்த வாரம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உஷ்ண காற்று
உஷ்ண காற்று வீசும் சீதோஷ்ண நிலை மாறும் கொல்கத்தா, ஓடிஷா கடுமையாக பாதிக்கப்படும். ஆந்திராவில் கடுமையான வெயிலினால் பாதிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
மழையால் பாதிப்பு
சென்னையில் திடீர் மழை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும். சுழல் காற்றினால் விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மதுரை கோவில் பிரச்சினை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் விபத்து
அடுத்த வாரங்களில் கேரளாவில் கோர விபத்து ஏற்படும் என்றும், கர்நாடகாவில் நில நடுக்கம் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. சர்வ அமாவாசை நாளில் கொடைக்கானலில் படகு விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மெரீனாவில் கலவரம்
சித்திரை மாத இறுதியில் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்படும் என்றும் சென்னை மெரீனாவில் கலவரம் வெடிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. மலைகளில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சனி செவ்வாய் நேரடி பார்வை
பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரம்தான் நிகழ்வுகளை தீர்மானிக்கிறது. இன்னும் சில நாட்களில் அதாவது மே 7ஆம் தேதி மிதுனத்தில் உள்ள ராகு உடன் செவ்வாய் இணைகிறார். செவ்வாய்,ராகு இணைவு கோச்சாரத்தில் சனியின் நேரடி பார்வையில் உள்ளது. இந்த நேரத்தில் கலவரம், தீ விபத்து ஏற்படும் என்பதால் பஞ்சாங்கத்தில் அவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.