விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: கடகம் ராசிக்காரர்களே சோதனைகள் சாதனைகளாகும்
சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கடக ராசிக்காரர்களே... உங்களுக்கு குரு பகவான், சனி பகவானின் சாதகமான நிலையால் ஆண்டின் முற்பகுதியில் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். இராஜயோக கால கட்டமாக அமைந்துள்ளது. சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றும் மனோ தைரியம் அதிகரிக்கும்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
கணவன் மனைவி நெருக்கம் கூடும்
கடகம் ராசியில் கடக லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். காரணம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
திருமணம் கை கூடும்
அதிசாரமாக ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீடு, 12ஆம் வீடு இரண்டாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களின் கவுரவம் அந்தஸ்து உயரும், பணவரவு அதிகரிக்கும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு பயணம் அமையும். வக்ரமடைந்து புத்திரபாவத்திற்கு மாறும் குரு பகவான் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆறாம் வீட்டில் சென்று அமர்கிறார். குரு பகவானால் இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ராஜயோக பலன்
ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனியால் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு இராஜயோகம்தான். சனியோடு கேதுவும் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும் அவர்களினால் ஆதாயமும் கிடைக்கும். உங்கள் ஜென்ம ராசியில் இருந்த ராகு பகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புனித தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கைகூடி வரும்.
சோதனைகள் சாதனைகளாகும்
குருவின் சஞ்சாரத்தினால் சிலருக்கு அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படும். சிலருக்கு வயிறு கோளறுகள் வரும் என்பதால் உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள். வரவுக்கு மீறிய செலவுகளும் எட்டிப்பார்க்கும் என்பதால் விரைய செலவுகளை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சிலருக்கு பணிச்சுமை கூடும். இந்த புத்தாண்டில் சில சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றுவீர்கள். பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.