விகாரி தமிழ் புத்தாண்டு 2019-20 : மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்
விகாரி தமிழ் புத்தாண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. வெற்றிகள் தேடி வரும். நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
சென்னை: சனிபகவானை அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் சூரிய ஓரையில் பிறந்துள்ளது நன்மைகள் நிறைந்த அதி அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. பணவரவு அதிகமாக இருக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு கல்வியும் வேலை வாய்ப்பையும் தரும் ஆண்டாக அமைந்துள்ளது.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
கூட்டுத்தொழில் நன்மை
சந்திரன் ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்த போது புத்தாண்டு பிறந்துள்ளதால் கணவன் மனைவி ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும் வகையில் அமையும். வருமானம் அதிகம் வந்தாலும் விரைய செலவுகளும் தேடி வரும் அதனை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுவது உங்கள் சாமர்த்தியம் அன்பர்களே.
அப்பாவின் உடல் நலம்
சூரியன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாடி வீடு கட்டிக்கொண்டிருப்பவர்கள் விரைவில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறுவீர்கள். ராசி அதிபதி சனி விரைய ஸ்தானத்தில் குரு, கேது உடன் குடித்தனம் செய்வதால் பண விரைய செலவுகள் அதிகரிக்கும்.
புதிய வேலை வாய்ப்பு
குருபகவான் சஞ்சாரம் 12ஆம் வீட்டில் அமைந்துள்ளதால் வெளிநாட்டு கல்வி வாய்ப்பும், வெளிநாட்டு வேலை வாய்ப்பும் தேடி வரும். சிறு பயணங்கள் சென்று வருவீர்கள். பயணங்களில் கவனமாக இருக்கவும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு கம்யூனிகேசன் துறையிலோ, தகவல் தொழில் நுட்பத்துறையிலோ வேலை வாய்ப்பு அமையும்.
பணவரவு அதிகரிக்கும்
சுக்கிரன் சஞ்சாரத்தினால் பணவரவு தேடி வரும். குடும்பத்தில் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்து பழகுங்கள் இல்லாவிட்டால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ராகு கேது சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தடை பட்டு வந்த காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். திருமணம் கைகூடி வரும். சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆண்டின் நடுவில் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இல்லாத சமயங்களில் மன இறுக்கம் ஏற்படும். மொத்தத்தில் இந்த புத்தாண்டு நன்மைகளும், வெற்றிகளும் நிறைந்த அதி அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.