விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: மிதுனம் ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
விகாரி தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி, கடக லக்னத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடி வரும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டில் ஜென்ம ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
ஏப்ரல் 1ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!
கிரகங்கள் சாதகம்
மிதுனம் ராசிக்காரர்களே... இந்த புத்தாண்டில் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இரண்டாம் வீட்டில் சந்திரன் லாபத்தில் சூரியன், பத்தில் சுக்கிரன், புதன் என கிரகங்கள் சஞ்சரிப்பதால் தொட்ட காரியம் ஜெயமாகும். பணப்பற்றாக்குறை குறையும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எந்த வேலைக்காகவும் யாரையும் நம்ப வேண்டாம். தன் கையே தனக்குதவி என வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.
திருமணம் கைகூடி வரும்
ஏழாம் வீட்டிற்குள் அதிசாரமாக சென்று சஞ்சரிக்கும் குரு பகவானால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்ட திருமணம் கூடி வரும். சித்திரை மாத இறுதியில் இருந்து ஐப்பசி மாதம் வரை குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் பிரச்சினைகள் தலை தூக்கும். பேசி தீர்க்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும்.
குரு பெயர்ச்சி சாதகம்
ஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்வது சிறப்பம்சம். ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் அக்கறை
ராகுபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெரிய நோய் இருப்பது போல தோன்றும் கவலை வேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகளை சாப்பிடுங்கள்.
ஜாமீன் கையெழுத்து வேண்டாம்
கண்ட சனியோடு கேது இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் முதலீடுகளை செய்யும் முன் யோசித்து செய்யவும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் கைகூடி வரும். தை மாதம் முதல் அஷ்டம சனி ஆட்டிப்படைக்கும் பண விசயங்களில் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி தொழில் செய்வதை தவிர்க்கவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வர இன்னல்கள் தீரும்.