விளம்பி தமிழ் புத்தாண்டு 2018 -19: கன்னி ராசிக்காரர்களுக்கு களை கட்டும்!
எதையும் அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளும் கன்னி ராசி நேயர்களே...இந்த விளம்பி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஆரம்பமே அமோகம் என்கிற ரீதியில் பிறக்கிறது.
Recommended Video
சென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டில் அதிக நன்மையும் குறைவான தீமையும் கலந்த ஆண்டாக அமைந்துள்ளது.
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். புத்தாண்டு நாளில் சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது. இது நன்மை தரும் அமைப்பாகும்.
குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு விளம்பி புத்தாண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
குடும்பத்தில் குதூகலம்
சித்திரை முதல் புரட்டாசி மாதம் வரை குருபகவான் குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானமான 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்கு வீட்டிலும் பொது இடத்திலும் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கடன்கள் அடைபடும். அக்டோபர் முதல் மார்ச் வரை உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும்.
காரிய தடைகள்
முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் போராட்டம் அதிகரிக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். ஆனாலும் செலவுகள் ஏற்படும். 13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்கிரமாக 4ல் அமர்வதால், இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.
பணம் விசயத்தில் கவனம்
தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், தாய்மாமன் மனஸ்தாபம் ஏற்படும். வீடு, மனை சொத்துக்களை இப்போது வாங்க வேண்டாம். ராசிக்கு 4வது வீட்டில் சனி பகவான் கண்ட சனியாக நீடிப்பதால் அம்மாவின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பண விஷயத்தில் கவனம் தேவை. மறந்தும் கூட ஜாமீன் போடவேண்டாம்.
பிள்ளைகள் பிடிவாதம்
சித்திரை முதல் மாசி வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11வதுவீட்டில் ராகு இருப்பதால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். கேது 5ஆம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். மாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு கேது 4ஆம் வீட்டிலும், ராகு 10ஆம் இடத்திலும் அமர்வதால் அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஏற்கனவே குரு, சனியால் இருந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.
பங்காளிடம் கவனம்
உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் ஏற்படும். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமாக பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் நிற்கிறார். கர்ப்பிணிகள் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துப் பிரச்சனை ஏற்படும். சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏற்படாமல் பார்க்கவும். பங்காளிடம் பக்குவமாக பேசவும்.
படிப்பில் தேர்ச்சி
சொந்த தொழில் செய்பவர்களுக்கு பெரிய மனிதர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள். அரசு பணிகளில் ஆதாயம் பெருகும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். கண்களில் ஏற்பட்ட குறை விலகும். ஆராய்ச்சி பட்டப்படிப்பில் நல்ல தேர்ச்சி ஏற்படும். மேலும் நல்லதெல்லாம் நடைபெற மதுரை கூடல் அழகர் பெருமாளையும், தாயாரின் உடல் நிலை சீரடைய வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவானையும் வணங்கலாம்.
[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]