விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19: மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்
விளம்பி புத்தாண்டு நல்ல நேரத்தில் பிறக்கிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது.
Recommended Video
சென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளையும், குறைவான தீமைகளையும் கொண்ட ஆண்டாக அமையப் போகிறது.
புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது. இது நன்மை தரும் அமைப்பாகும்.
குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த ஆண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். மிதுனம் ராசிக்காரர்களுக்கு விளம்பி புத்தாண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
மிதுனம் ( மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம் பாதங்கள்)
குழந்தை பாக்கியம்
புத்திசாலித்தனமும், நற்குணங்களும் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே! விளம்பி தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் குருபகவான் அமர்ந்துள்ளார். இது சிறப்பாக அமைப்பு. புத்திரபாக்கியம் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறுகிறார். உங்கள் ராசிக்கு 6வது இடம் என்பதால் கொஞ்சம் அலைச்சல் அதிகரிக்கும்.
செவ்வாய் சனி கூட்டணி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானதிபதியும் 6ஆம் அதிபதியுமான செவ்வாய் பகவான் அட்டமாதிபதியும், பாக்ய ஸ்தானாதிபதியுமான சனியுடன் இணைந்து 7வது வீட்டில் இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. வீட்டில் மனைவியுடன் கூடலை விட ஊடல் அதிகமாக இருக்கும் எனவே வாய் வார்த்தைகளில் கவனம் தேவை.
மருத்துவ செலவுகள்
இந்த ஆண்டு முழுவதும் கண்டக சனியாக தொடர்வதால் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மே மாதத்தில் இருந்து செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு அட்டம ஸ்தானமான மகரத்திற்கு இடம் மாறுகிறார். வீடு, மனை நிலப்பிரச்சினை, சொத்துக்கள் பாக பிரிவினையில் சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படலாம்.
கூட்டு தொழில் வேண்டாம்
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். கூட்டு தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு கூட்டாக எந்த தொழிலும் செய்ய வேண்டாம்.
ஆன்மீக பயணம்
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2வது வீட்டிலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8வது வீட்டிலும் அமர்ந்துள்ளனர். பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர் ஜென்ம ராகுவாகவும், 7வது வீட்டில் சனியுடன் கேதுவும் அமர உள்ளனர். உங்கள் உடல் நலனின் அக்கறை தேவை. வாழ்க்கை துணையுடன் ஆன்மீக பயணம் செய்ய ஏற்ற காலகட்டம் இதுவாகும்.
நன்மை தரும் ஆண்டு
பெண்களுக்கு மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவு ஏற்படும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை முதலீடுகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். வரும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். மொத்தத்தில் இந்த விளம்பி ஆண்டு சாதனைகள் செய்யப் போகும் ஆண்டாக இருந்தாலும் சவால்களும் இருக்கும் வெற்றிகரமாக சாதித்து காட்டுவீர்கள். மேலும் பல நன்மைகள் நடைபெற புதன்கிழமைகளில் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.
[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்]