விளம்பி: தமிழ் புத்தாண்டில் ஆதாயம் அதிகம், விரையம் குறைவு - செல்வம் பெருகும்
தமிழ் புத்தாண்டில் விளம்பி 32வது ஆண்டு. விளம்பி தமிழ் புத்தாண்டில் ராசிகளின் ஆதாயம், விரயம் பார்க்கும் போது 12 ராசிகளுக்கும் 65 ஆதாயம் வந்துள்ளது.
சென்னை: விளம்பி தமிழ் புத்தாண்டில் ராசிகளின் ஆதாயம், விரயம் பார்க்கும் போது 12 ராசிகளுக்கும் 65 ஆதாயம் வந்துள்ளது. விரையம் 59 வந்துள்ளது. ஆதாயம் அதிகமாக வந்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில்களில் முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் உற்பத்தி பெருகும்.
விளம்பி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் பாதகாதிபதி சனி பகவான் சேர்ந்து காணப்படுவதால் மின்கசிவால் தீ விபத்துகளும் அழிவும் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
விளம்பி தமிழ்ப் புத்தாண்டு நாளை சனிக்கிழமையன்று பிறக்கிறது. குரு பகவானின் வீடான மீன ராசியிலும், சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும், சுக்கிரனின் வீடான ரிஷப லக்னத்திலும் இந்த ஆண்டு பிறப்பதால் மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது அனைத்து விதமான யோகங்களையும் தரும். ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.
நவகிரக ஆதிபத்தியங்களில் ராஜா, தான்யாதிபதியாக சூரியன் திகழ்கிறார். சனி மந்திரியாகவும், சுக்கிரன் சேனாதிபதியாகவும் அர்க்காதிபதி, மேகாதிபதியாகவும் திகழ்கின்றனர்.
விளம்பி ஆண்டு வெண்பா படி பார்த்தால் மழை குறைவு என்று கூறினாலும் சுக்கிரன் பலமாக இருப்பதால் பருவமழைகள் நன்றாக பெய்யும். புழுதி காற்று பலமாக தாக்கும்.
தனசப்தமாதிபதியாக சுக்கிரன் வருவதால் மக்களிடையே சேமிக்க முடியாத நிலை ஏற்படும். விவாகரத்துகள் அதிகரிக்கும். பாக்யவிரையாதிபதியாகக் குரு வருவதாலும், குரு வக்ரம் பெற்று நிற்பதாலும் மேலும் சில வங்கி மோசடிகள் கண்டறியப்படும்.
இந்த ஆண்டில் ராஜாவாக சூரியன் வருவதால் பணத் தட்டுப்பாடு குறையும். ரியல் எஸ்டேட் ஓரளவு சூடுபிடிக்கும். மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். காவல் துறை குறைகள் களையப்படும்.
மந்திரியாகச் சனி பகவான் வருவதால் மலைக் காடுகள் அழியும். வன விலங்குகளின் எண்ணிக்கை குறையும். அரிய உயிரினங்கள் அழியும். புதைந்து கிடக்கும் பழைய ஐம்பொன் சிலைகள் வெளிப்படும்.
அர்க்காதிபதியாகவும், சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் கலையுணர்வும் பொழுதுபோக்கில் ஆர்வமும் அதிகரிக்கும். புயல் சின்னம் அதிகம் உருவாகும். புயலுடன் அதிக மழை பொழியும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு அதிகம் இருக்கும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவத் துறையில் இருப்பவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படும்.
வருடம் பிறக்கும்போது சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதால் பருவ மழை சீராக இருக்காது. கடற்கரை ஓரத்தில் புயல் சின்னம் உருவாகும். பருவம் தவறி மழை பொழியும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைக் கண்டறிய பிரத்யேக நவீன புதிய செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்ணில் ஏவப்படும்.
இரசாதிபதியாக குரு வருவதாலும் அந்தக் குருவைச் சுக்கிரன் சமசப்தமமாகப் பார்ப்பதாலும் பனங்கற்கண்டு, வெல்லம், கருப்பட்டியின் விலை உயரும்.
ராசிகளின் ஆதாயம், விரயம் பார்க்கும் போது 12 ராசிகளுக்கும் 65 ஆதாயம் வந்துள்ளது. விரையம் 59 வந்துள்ளது. ஆதாயம் அதிகமாக வந்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில்களில் முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் உற்பத்தி பெருகும்.