பஞ்சாங்கம் சொன்னது பலித்தது: பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள்... நிரம்பி வழியும் அணைகள்
தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும். மலை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்தது போலவே தற்போது பலித்துள்ளது.
சென்னை: விளம்பி ஆண்டில் காவிரி, கொள்ளிடம், வைகை பெருக்கெடுத்து ஓடும் என்றும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது. அதுபோல தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து ஆறுகளில் தண்ணீர் பெருகியுள்ளது.
மே இறுதியில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தற்போது இந்தியா முழுவதும் நிலை கொண்டுள்ளது. கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதால், கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்கள் உள்பட மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பல பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிறைந்து வருகின்றன.
நிலை கொண்ட காற்றழுத்தம்
தென்மேற்குப் பருவமழையானது கேரளா தொடங்கி இமயமலை வரை, நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவைத் தந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது இணையதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தென்பகுதியில் உண்டானது காற்றழுத்தமானது, வடபகுதியில் தற்போது நிலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெருமழை பெய்யும்
காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு வங்கத்தில் கங்கை நதி பாயும் பகுதி மற்றும் வடகிழக்கு ஒடிசா வரை பரவியுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, மகாராஷ்டிராவிலுள்ள விதர்பா, ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி மற்றும் மத்தியப் பிரதேசம் நோக்கி இந்தக் காற்றழுத்தம் நகருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு பெருமழை முதல் மிகப் பெருமழை வரை பெய்யும்.
கேரளாவில் மழை
கோவா, சட்டீஸ்கர், மத்திய மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கடற்கரைப்பகுதிகளிலும் பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஜார்க்கண்ட், தெலங்கானா, அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், கேரளா மற்றும் கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளிலும் இன்று பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பஞ்சாங்கம் கணிப்பு
விளம்பி வருடத்திய பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் சுபிட்சம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் குறிப்பாக மேட்டூர், பெரியாறு, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அடவிநயினார், பாபாநாசம், உள்ளிட்ட பல அணைகள் நிரம்பி வழியும். காவிரி, வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போலவே தற்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையமும் பெருமழை பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.