விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பிள்ளையார்பட்டி, தஞ்சை மெலட்டூரில் தேரோட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்திலும் தஞ்சாவூர் மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலிலும் தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதே போல தஞ்சை மெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பே பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கிவிடும். இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினசரியும் காலையில் வெள்ளி கேடகத்திலும் இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். ஆறாம் திருநாளன்று கஜமுகாசுர வதம் நடைபெற்றது. நேற்று முக்கிய நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் பிடித்து இழுத்தனர். இரவு யானை வாகனத்தில் வீதி உலா வந்தார். மாலை 4.30 மணி முதல் 10 மணிவரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பக விநாயகர் காட்சி அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிற்பகலில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனையடுத்து பிள்ளையாருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும்.
இன்று இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறும்.
மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. ஸ்ரீகர்க மகரிஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் 81வது தலமாகும். இந்த கோவிலில் விநாயகர் சித்தி, புத்தியுடன் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.
இந்த ஆலயத்தில் விநாயகர் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. சிவ ஆலயம் போல காணப்படும் இங்கு நர்த்தன விநாயகரும் அருள்பாலிக்கிறார். சூலாயுதம் தாங்கிய சூலத்துறை கணபதியும் காட்சி அளிக்கிறார். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 24ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 7ஆம் திருநாளன்று சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.