வாத்தியாரும் பிள்ளையாரும் ஒன்றுதான் - தோப்புக்கரணம் சொல்லும் உண்மை
விநாயகரின் முன் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது வழக்கம். தலையில் குட்டிக்கொள்வதாலும் தோப்புக்கரணம் போடுவதாலும் மிகப்பெரிய நன்மைகள் ஏற்படுகின்றன.
சென்னை: விநாயகருக்கு முன்பாக தலையில் குட்டிக்கொண்டு... தோப்புக்கரணம் போடுவது ஐதீகம். தோப்புக்கரணம் என்றால் இரு கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இதை செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது. இதனால் நினைவாற்றல் கூடும்.
விநாயகரின் செல்ல கோபத்தை குறைக்க மாமா மகாவிஷ்ணு தனது காதை பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுந்தார் இதனால் விநாயகர் மகிழ்ச்சியடைந்தார். அதன் நினைவாகவே இன்றும் தோப்புக்கரணம் போடுவதாக கூறுகிறது புராண கதை.
தோப்புக்கரணம் உடற்பயிற்சிகளுக்கு தாய் என சொல்லலாம். தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் பல பலன்கள் உடலுக்கு கிடைக்கும். ஆன்மிக ரீதியில் நம் உடல் ஆரோக்கியத்தை யோசித்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை புகுத்தினர்.
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். இதைப்பார்த்து விநாயகர் கோபம் தணிந்து மகிழ்ச்சியடைந்தார். அன்று முதல் விநாயகரின் முன்பாக தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.
இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் இரு கைகளாலும் ஒரே தடவையாக 3 முறை குட்டிக்கொள்வதனால் மூளை சுறுசுறுப்படையும். வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி இரு கால்களையும் மடக்கி முதுகை வளைக்காமல் நேராக உட்காரும் நிலையில் தோப்புக்கரணம் போட வேண்டும்.
கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்புகரணம் செய்யும் போதும் “ஒம் கணேசாய நம” என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும். உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. அதோடு உடலின் ஆற்றல் சக்தியும் அதிகரிக்கிறது. தோப்புகரணத்தில் காது நுனிகளில் தொடுவதன் காரணமாக, மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கிறது. தோப்புக்கரணம் செய்வதால் மூளைக்கு ரத்தோட்டம் சீராகி மனதில் ஏற்படும் மன அழுத்தம் சீரடையும் மனச்சோர்வு நீங்குவதோடு உடலின் கை கால்களின் தசைகள் வலிமையடையும்.