பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Recommended Video
சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா மூலவருக்கு முன்பு உள்ள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, தற்பைப் புல் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாள்தோறும் விநாயகா் பெருமான் பல்வேறு வானத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். எட்டாம் நாள் திருவிழா நாளன்று வருடத்துக்கு ஒரு முறை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் மாலையில் தேரோட்டம் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தியன்று 16 படி அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களைக் கொண்டு ராட்சத கொலுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் செய்த பிறகு, சதுர்த்தி விரதம் இருந்த பக்தர்களுக்கு அந்தக் கொலுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.