விநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் மாலை நேரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமாக செப்டம்பர் 1 ஆம் தேதி தேரோட்டமும் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.
சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு திகழ்கிறார் விநாயகர். அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்திலும் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்கிறார். ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது விநாயகருக்கு சிறப்பம்சம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி கொடியேற்றம்
இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விநாயகர் உலா
விழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை நடைபெறும். இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை,அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் விநாயகர்.
தேரோட்டம்
செப்டம்பர் 1ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 2ஆம் தேதி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பக்தர்கள் 16 படியில் செய்த கொழுக்கட்டை படையல் வைத்து வழிபடுவார்கள்.
கொலுக்கட்டை பிரசாதம்
காலையில் குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதை தொடர்ந்து 16 படி அரிசியில் ராட்சத கொலுக்கட்டை படையலிடப்பட்டு பின் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.