விநாயகருக்கு தோப்புக்கரணம் ஏன் போடுறோம் தெரியுமா?
சென்னை: விநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை.
விநாயகரை வணங்கும் முன்பு வலதுகையால் இடதுபக்க நெற்றிப் பொட்டிலும், இடது கையால் வலதுபக்க நெற்றிப் பொட்டிலும் 3 முறை குட்டிக் கொண்ட பிறகு, வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்து தோப்புக் கரணம் போட்டு வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்து, எழுவதால் நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் மூளைக்கு செல்வதாக அறிவியல் காரணமும் உள்ளது.
இதற்கு ஒரு புராணக்கதை உள்ளது. அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக காவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார்.
அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்ட தோப்புகரணத்தை விநாயகர் முன் பக்தியுடன் தேவர்கள் போட்டனர்.
அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது.
அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக் கொள்வதாலும் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.
நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு, விக்னங்களை விலக்கும் விக்னேஸ்வரருக்கு 1, 3, 5, 7, 9, 18 என்ற ஒன்பதின் பெருக்கமாக தேங்காயை சிதறு காயாக உடைத்து வழிபட வேண்டும். இதற்கும் ஒரு புராண கதை உள்ளது. மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.
ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.
தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.