கிருஷ்ணர் ஜெயந்தி 2019: கண்ணனை விடவா கஷ்டத்தையும் சவால்களையும் பார்த்திருக்கப் போகிறோம்
ஆயர்பாடியில் குழல் ஊதிக்கொண்டு கோபியர்களுடன் உல்லாசமாக வலம் வருபவன் கண்ணன், சந்தோஷி, சுகபோகவாசி என்றுதான் கண்ணனைப் பற்றி நினைப்பார்கள். ஆனால் கண்ணன் பிறந்தது முதல் வைகுண்டம் சென்றது வரை பல சவால்களை சந
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் என்றாலே மகிழ்ச்சியானவன். வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியோடும் உற்சாகமாகவும் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவன். சவால்கள் இருந்தாலும் அதை சந்தோஷமாக சந்தித்தவன். தேவகியின் வயிற்றில் ஜனித்தது முதல் வேடன் கை அம்பு காலில் பட்டு வைகுண்டம் சென்றது வரை கிருஷ்ணர் சந்தித்த சவால்கள் ஏராளம்.
கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த வேளையில் சவால்களை சாமர்த்தியமாக சமாளித்த கிருஷ்ணரைப் பற்றி கூறியுள்ளார் ஆன்மீக பேச்சாளர் திரு மு.ரா. சுந்தரமூர்த்தி.
கிருஷ்ணர் என்றதும் அவர் பரமாத்மா என்பது மறந்து போய் மயிலிறகும் புல்லாங்குழலும் அவனது சௌந்தர்யமும் கோபியர்களின் கொஞ்சலும் ராசலீலைகளும் நினைவுக்கு வந்து அவன் காதலும் காமமும் பொங்கும் உல்லாசியாக தோன்றலாம்.
செப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும்
கிருஷ்ணரின் போதனை
உண்மையில் கிருஷ்ணர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்று போதிக்க வந்த அவதாரம் தான்.
ஆனால் அவர் வாழ்க்கை முழுவதும் எதிர்ப்பு , சண்டை , போர் ,சூழ்ச்சி , சிக்கல் , வம்பு வழக்கு என்று எல்லா வித துன்பங்களையும் எதிர் கொண்டும் சாபத்துக்கு ஆளாகியும் வேடனிடம் அம்புபடி பட்டு வைகுண்டம் திரும்ப வேண்டியிருந்தது.
கர்ப்பத்திலேயே சிக்கல்
கிருஷ்ணருக்கு பிறப்பில் இருந்தே சிக்கல்தான். தேவகியின் கர்ப்பத்தில் இருக்கும் போதே அதாவது கிருஷ்ணர் பிறக்கும் முன்பே அவனை கொல்ல துடித்து கொண்டிருந்தான் உறவுகளில் முக்கியமானது எனக்கருதப்படும் தாய் மாமன் கம்சன்.
கோகுலத்தில் கண்ணன்
சிறையில் பிறந்து, பிறந்த அன்றே பெற்றவளை பிரிந்து, விடாமல் பெய்த மழை வெள்ளத்தில் தப்பி பிழைத்து கோகுலத்தில் மறைந்து வளர்ந்து, வெண்ணைய் திருடனாய் வலம் வந்து , கோபியர்களிடம் குறும்புகள் செய்தும் செல்லக் குழந்தையாக இருந்தும் கம்சன் அனுப்பிய அரக்கர்களிடம் தப்பிக்க படாதபாடுபட்டு அது மட்டுமன்றி அவர்களை அழித்ததும் நினைக்கவே பிரமிப்பு தான்.
சாபவிமோசனம்
கிருஷ்ணன் எந்த இடத்திலும் நிம்மதியாக இருந்ததில்லை
சிறுவயதிலேயே தன் எதிரிகளை மட்டுமல்லாமல் ஊரார் உற்றார்களின் பொது எதிரிகளான காலிங்கன் போன்றோரையும் ஒழித்து, பலருக்கு சாபவிமோசனம் அளித்து அப்பப்பா எத்தனை சிரமம்.
கோவர்த்தன கிரி
இந்திரன் கோபத்துக்கு கோகுலவாசிகள் ஆளான போது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி அவர்களை காத்து அடடா கிருஷ்ணன் செய்த சாகசங்கள் கொஞ்ச நஞ்சமா ?
பிறந்தது முதல் அந்த பிஞ்சு பாலகன் சந்தித்த சவால்கள் அதோடு முடியவில்லை.
கம்சனை வதம் செய்த கண்ணன்
எப்படியோ கண்ணனை கண்டு பிடித்து விட்ட கம்சன், அவனை துவாரகைக்கு கொண்டு வந்தால் கொன்று விடலாம் என நினைத்து , அழைத்து வந்து முதலில் முரட்டு யானை விட்டு கொல்ல முயன்றான். யானை வாலைப் பிடித்து சுழற்றி வீசினான் கண்ணன். அடுத்து பெரும் மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்த வீரர்களுடன் மோத வேண்டியதாயிற்று . அவர்களையும் வென்றார். கடைசியாக கம்சனுடன் போர் செய்து அவனை கொல்ல வேண்டியதாயிற்று.
பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ணன்
இப்படி கண்ணன் எதிர் கொண்ட துன்பங்கள் கொஞ்சம் அல்ல . பாண்டவர்களுக்கு கூட பாஞ்சாலியை வைத்து சூதாடி தோற்று துன்பம் வந்த பின்பே கிருஷ்ணன் உதவியை வேண்டினர் முன்பே அவனை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவனை தேர் ஓட்டியாக்கி போர் களத்தில் நிறுத்தினர் . போர் , சூழ்ச்சி , சாதுர்யம் எல்லாம் செய்ய வேண்டியதாக இருந்தது.
போர்க்களத்தில் கீதை உபதேசம்
பகவத்கீதையை கூட போர் களத்தில் நின்று தான் போதிக்க வேண்டி இருந்தது . இத்தனைக்கும் கலங்காமல் கவலைப் படாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை கிருஷ்ணனின் கதைகளில் இருந்து கற்று கொள்ள முடியும்.
கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த முருக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களுடன் கிருஷ்ணனின் உபதேசங்களையும் பாகவதத்தையும் அசைபோடுங்கள் வாழ்க்கையின் உன்னதம் பிடிபடும் .