குருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் பலன்கள்... பரிகாரங்கள்
சனி பகவான் தொழில் காரகர், ஆயுள்காரகரும் அவரே. குரு பகவான் சுப கிரகம். ஜாதகத்தில் சனியும், குருவும் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒருவருக்கு தொழில் அமையும்.
Recommended Video
சென்னை: மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். அரசு வேலையோ? அடிமைத் தொழிலோ சனிபகவான் தயவு நிச்சயம் தேவை. குருவும் சனியும் ஜாதகத்தில் கூட்டணியாக அமைந்திருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.
குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக பிரகஸ்பதி என்று அழைக்கப்பட்டார். ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது .
பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர்.
குரு சனி சேர்க்கை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.
குரு சனி சேர்க்கை
ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். இப்போது தனுசு ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வரை தனுசுவில் சஞ்சாரம் செய்வார். துலாம் ராசியில் உள்ள குரு இந்த ஆண்டு அக்டோபரில் விருச்சிகம் ராசிக்கு வருகிறார். 2019ஆம் ஆண்டு குருபகவான் தனுசு ராசியில் நுழைவார். அப்போது குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.
பொக்கிஷ காப்பாளர்
குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர். ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது.
குருவும் சனியும் ஒன்று சேர்ந்தாலே வழக்கறிஞராகத் திகழ்வார்கள். எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்வார்கள். மடங்கள், கோயில்களில் தர்மகர்த்தா, பொக்கிஷத்தை பாதுகாக்கும் அதிகாரி, இந்து அறநிலையத்துறை அதிகாரி போன்ற பதவிகளில் அமர்வார்கள்.
அறிஞர்கள்
லக்னத்தில் - ஒன்றாம் இடத்திலேயே குருவும், சனியும் சேர்ந்திருந்தால் இரக்க உணர்வோடு விளங்குவார்கள். எந்த விஷயத்திற்கும் அக்கறையோடு ஆலோசனைகள் கூறுவார்கள். கவிதை, கட்டுரை, நாவல்கள் போன்றவற்றில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். இரண்டாம் இடத்தில் குரு, சனியோடு சேர்ந்து இருந்தால் பல மொழிகளை அறிந்த பண்டிதர்களாகவும் விளங்குவார்கள்.
பங்குச்சந்தையில் பணம்
மூன்றாம் இடத்தில் குருவும் சனியும் இணைந்திருந்தால் போராளியாகத் திகழ்வார்கள். எழுத்துத் திறமையோடு திகழ்வார்கள். அயல்நாட்டுத் தொடர்புள்ள ஆதாயம் நிச்சயம் உண்டு. வரவுக்கு மீறி செலவு செய்து சிக்கிக் கொள்வார்கள். நாலு வார்த்தை பாராட்டிப் பேசினால் மயங்கி விடுவார்கள். நான்காம் இடத்தில் குருவும் சனியும் இணைந்தால் பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
வம்பு வழக்கு
ஐந்தாம் இடத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் வந்தபடி இருக்கும். முற்பிறவி குறித்த ஆராய்ச்சிகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள்.
ஆறாம் இடத்தில் இவ்விருவரும் அமர்ந்தால் கடன்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். பகைவர்களின் தொந்தரவு வம்பு வழக்குகள் வரும்.
குழந்தை பாக்கியம்
ஏழாம் இடத்தில் குருவும் சனியும் அமர்வதால் திருமணம் தடை ஏற்படும். தாமதமாக திருமணம் நடந்தாலும் குழந்தை பாக்யம் உடனே கிடைக்கும். எட்டாமிடத்தில் குரு சனி சேர்க்கையால் செய்யும் தொழிலில் தனி முத்திரை பதிப்பார்கள். ஒன்பதாம் இடத்தில் குருவும் சனியும் அமர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறுபவராக விளங்குவார்கள்.
சித்தர்களாவார்கள்
பதினோராம் இடத்தில் குரு சனி சேர்ந்தால் எந்தத் தொழிலை தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது முன்னேறுவார்கள். பன்னிரெண்டாம் இடத்தில் குருவும் சனியும் இணைந்திருப்பது தூக்கம், மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கிறது. மகான்களின் ஜீவ சமாதிகள், சித்தர் வழிபாடு என்று ஈடுபடுவார்கள்.
குருவார விரதம்
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். சனி நீசமடைந்திருந்தாலோ, சரியில்லாத இல்லாத இடத்தில் இருந்தாலே சனிக்கிழமை விரதம் மேற்கொண்டு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.