சபரிமலை ஐயப்பனை தரிசிக்க எந்த பாதையில போறது ரொம்ப ஈஸி தெரியுமா
பட்டனம் திட்டா : சபரிமலை செல்ல விரதமிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், வாகனங்களில் கிளம்பி நேராக பம்பைக்கு வந்து, அங்கிருந்து கடுமையான சிறுவழிப்பாதை என்னும் காடு, மலை வழியாக 7 கி.மீ பாதயாத்திரையாக சென்று சபரிமலையை அடைகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் 4 வழிகளில் சென்றாலும், பெரும்பாலும் செங்கோட்டை-புனலூர் வழியாக பட்டனம்திட்டா சென்று அங்கிருந்து பம்பை செல்வதையே விரும்புகின்றனர்.
இன்றைய நவீன காலத்தில் எல்லாவற்றையுமே வெகு சீக்கிரத்தில் அடையவேண்டும் என்று தான் அனைவருமே எண்ணுகின்றனர். அதே விஷயம் கடவுள், கோவில் விஷயத்திலும் நடக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். நம்முடைய எந்த ஒரு விஷயத்தையுமே காரண, காரியம் இல்லாமல் எந்த ஒரு விதிமுறைகளையும் வகுத்திருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள .வேண்டும்.
இது சபரிமலை ஐயப்பன் தரிசன விஷயத்திற்கும் பொருந்தும். சபரிமலை ஐயப்பனை மனதார நேசித்து பக்தி சிரத்தையுடன் 48 நாட்கள் கடுமையான விரதமுறைகளை கடைபிடித்து இருமுடி கட்டிக்கொண்டு செல்பவர்களில் அநேகம் பேர் பெருவழிப் பாதையையே தேர்ந்தெடுத்து நடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். ஆனால், இப்போதெல்லாம் பெருவாரியான பக்தர்கள், அவசர அவசரமாக மாலையை அணிந்து கொண்டு, மிகக்குறைந்த நாட்கள் மட்டும் விரதம் இருந்து, வாகனங்களில் நேராக பம்பைக்கு வந்து விடுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறுவழிப் பாதையில் நடந்து சென்று சபரிமலையை அடைகின்றனர்.
சபரிமலை யாத்திரை
உண்மையில், பெருவழிப் பாதை என்று சொல்லப்படும் எரிமேலியில் தொடங்கி, பேரூர்தோடு, காளைகட்டி, அழுதா மலை, அழுதா நதி, கல் இடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, மூக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கலிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என பாதங்களை பதம் பார்க்கும் சிறு கற்கள், உயர்ந்த மரங்களின் வேர்தடங்கள் அடங்கிய கரடு முரடான காட்டு வழிப்பாதையில் நடந்த சென்று பம்பையை அடைய வேண்டும்.
காடுமேடெல்லாம் கடந்து
அங்கிருந்து சிறு வழிப்பாதையில் நடந்து சென்று சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை அடைய வேண்டும். அந்த பாதையின் மொத்த தூரம் சுமார் 75 கி.மீ ஆகும். மேற்கண்ட பெருவழிப்பாதை என்பது பெரும்பாலும் கரடு முரடான மலைப்பிரதேச காட்டு வழிப்பாதை என்பதால் குறைந்த பட்சம் 2 நாட்களாவது ஆகும். அந்த காட்டு வழிப்பாதையில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். ஆரம்ப காலந்தொட்டே, ஐயப்ப பக்தர்கள் அனைவருமே அந்த பாதையைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.
நடைபயணம்
ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் வாகனங்களிலேயே நேராக பம்பைக்கு வந்து அங்கிருந்து 7 கி.மீ தூரமுள்ள சிறுவழிப் பாதையில் நடந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு வருகின்றனர். இந்த பாதையில் நடந்து செல்ல அதிகபட்சமாக 4 முதல் 5 மணி நேரம் தான் பிடிக்கும். தற்போது தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாகனத்தில் பம்பை நதியை 4 வழிகளில் வந்தடைகின்றனர்.
பக்தர்களின் பயணம்
முதலாவதாக, மதுரை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களில் பெருவாரியானவர்கள், வண்டிப்பெரியார்-எருமேலி பாதையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மொத்த தூரம் சுமார் 206 கி.மீ ஆகும். திருச்சி, மதுரையிலிருந்து செல்பவர்கள் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, கம்பம், குமுளி வழியாக வண்டிப்பெரியாறை சென்றடையலாம். அங்கிருந்து சுமார் 53 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு வழியில் பயணம் செய்து எருமேலியை அடையலாம். இந்த வண்டிப்பெரியாறு-எருமேலி பயணவழியானது ரம்மியமானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்பவர்களுக்கு இந்த வழியே செல்வது தான் பயண நேரத்தை குறைக்கும்.
ஆன்மீக பயணம்
இரண்டாவது வழியானது, செங்கோட்டை, பத்தனம் திட்டா வழியாக பம்பையை அடைவது. இந்த வழியானது விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். செங்கோட்டை-பட்டனம் திட்டா-பம்பை வழியில் சபரிமலை தூரம் சுமார் 87 கி.மீ ஆகும். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிளம்பும் பக்தர்கள் பெரும்பாலோனோர், குற்றாலத்தில் குளித்துவிட்டு, அங்கிருந்து தென்மலை, கொட்டாரக்கரா போன்ற அழகிய சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு செல்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர்.
சுற்றுலா தலங்கள்
அடுத்ததாக இருப்பது, நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழியாக பட்டனம்திட்டா வந்து அங்கிருந்து பம்பையை அடைவது. தூத்துக்குடி, நெல்லை வட்டார பகுதிகளில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே தேர்ந்தெடுக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பட்டனம் திட்டா இடையே உள்ள தூரம் சுமார் 173 கி.மீ ஆகும். நெல்லை பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து பக்தர்களுமே, வழியில் உள்ள, கன்னியாகுமரி, நாகர்கோவில், சுசீந்திரம், கோவளம், திருவனந்தபுரம் போன்ற சுற்றுலாத் தளங்களை பார்த்துவிட்டு பின்னர் பட்டனம் திட்டா வந்து அங்கிருந்து பம்பையை அடைகின்றனர்.
ஈஸியான பாதை
அடுத்ததாக இருப்பது கோயம்புத்தூர்-கோட்டயம்-பம்பை வழியாகும். மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். கோயம்புத்தூர்-கோட்டயம் வழி தான் சபரிமலை செல்வதற்கு மீக நீண்ட தூர பயண வழியாகும். கோயம்புத்தூரிலிருந்து சபரிமலையை சுமார் 271 கி.மீ தூரமாகும். ஆனால் பெரும்பாலான தமிழக பக்தர்கள் செங்கோட்டை-பட்டனம் திட்டா வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். இந்த வழி தான் மிகக் குறைந்த தூரமாகும்.