குருபெயற்சியன்று தேவகுரு தக்ஷிணாமூர்த்தியே வணங்கனுமா?
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி வருகின்ற ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குருபெயர்ச்சி யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் விமரிசையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
ப்ரஹஸ்பதியும் தக்ஷிணாமூர்த்தியும் ஒன்றா?
தக்ஷிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தக்ஷிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தக்ஷிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவாம்சமாகும். குரு பகவான் என்பவர் கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தக்ஷிணாமூர்த்தி என்பவர் முதலாளி. பிரஹஸ்பதி அதிகாரி. தக்ஷிணாமூர்த்தி குருவிற்கெல்லாம் குரு. பிரஹஸ்பதி தேவகுரு மற்றும் நவக்ரஹ குரு.
தக்ஷிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகளற்றவர்.
தக்ஷிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
பிரம்மனின் புத்திர்ர்களில் ஒருவரான ஆங்கீரஸ மகரிஷிக்குப் பிறந்தவரே குரு. இவர் சகல விதமான சாஸ்திரங்கள் கலைகள், வேதங்கள் ஆகியவற்றை முறையோடு பயின்று பூர்ண தேர்ச்சி பெற்று தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கினார். இவர் மனைவி தாரை இவர்களுக்கு கச்சன் என்ற புத்திரன் உண்டு.
ஒரு சமயம் சந்திரன் ராஜ சூய யாகம் நடத்தியபோது குருவுக்குப் பதில் அவரது ஸ்தானத்தை ஏற்கச் சென்றால் தாரை, ஆனால் யாகம் முடிந்து தம் இருப்பிடம் திரும்பாமல் சந்திரன் அழகில் மோகம் கொண்டு தான் மற்றொருவர் மனைவி என்பதையும் மறந்து விட்டு சந்திரனுடனேயே தங்கிவிட்டாள்.
சந்திரனும் தன் குரு நாதரின் மனைவி என்பதை மறந்து தாரையுடன் இணைந்து சுக போகங்களில் ஈடுபட்டுவிட்டார். தாரை வர மறுத்துவிட்டாள் முறையற்ற செய்லைக்கண்ட சிவபெருமான் குருவிக்காகப் பரிந்து தாமே சந்திரனுடன் போரில் ஈடுபட்டார். நிலைமையின் விபரீத்தை அறிந்த பிரம்மன் தமது பேரன் சந்திரனை அணுகி தாரையை குருவிடம் சேர்த்து விடும்படி கூறினார். சந்திரன் மறுக்கவே பிரம்மன் சந்திரனை சபித்துவிட்டார். எனவே சந்திரன் பயந்து தாரையை குரு தேவரிடம் ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு வேண்டினார். இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டபோதும் குரு தனது பெருந்தன்மையால் சந்திரனை மன்னித்து விட்டார். பிறகு தாரைக்குப் பிறந்த புதனை சந்திரனிடமே அனுப்பிவிட்டார். இதுவே குருவிற்க்கு சந்திரனும் புதனும் பகையாக காரணமாகும்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல. தக்ஷிணாமூர்த்தியை தென்திசை கடவுளாக(சிவகுருவாக) வழிபடுங்கள் என்கிறார்கள்.
சில ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தக்ஷிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தக்ஷிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தக்ஷிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று ஒருசாரர் வாதிடுகிறார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தக்ஷிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தக்ஷிணாமூர்த்தி என்று ஒருசாரர் சொல்கிறார்கள்.
எது எப்படியாகிலும் ஆன்மீக. உயர்வையும் கல்வியில் மேன்மையும் அடைய விரும்புபவர்கள் அதாவது அருள் வேண்டுபவர்கள் தக்ஷிணாமூர்த்தியான ஆலங்குடியானையும் லௌகீக விஷயங்களில் உயர்வடைய வேண்டுவோர் அதாவது பொருள் வேண்டுவோர் தேவகுருவான ப்ரஹஸ்பதி எனும் தென்குடி திட்டையில் உள்ள குருபகவானையும் வணங்கலாம் என கூறி குருப்பெயர்ச்சியில் குருபகவானை வரவேற்க்க வாருங்கள் என கூறி அன்போடு அழைக்கிறேன்.