லோக்சபா தேர்தல் 2019: ஜெயிக்கப் போவது ஆளுங்கட்சியா, எதிர்கட்சியா - பஞ்சாங்கம் சொல்வதென்ன?
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றப்போவது ஆளுங்கட்சியா? எதிர்கட்சியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கணிப்புகள் வெளியானாலும் ஜோதிடர்களும் தங்களின் கணிப்புகளை கூறி வருகின்றனர். எப்போது தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சிக்கு முடிவு சாதகமாக இருக்கும் என்று தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
16வது லோக்சபாவிற்கான பதவிக்காலம் வருகிற 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. 17வது லோக்சபாவிற்காக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். எனவே பாஜகவின் ஆட்சிக்காலம் இன்னும் சில நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.
நினைத்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு.. அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு.. கிழித்த முரசொலி!
லோக்சபா தொகுதிகள்
நாட்டில் மொத்தம் 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறும். மொத்த லோக்சபா தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித் தொகுதிகள் அந்த 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தனித் தொகுதிகளில் முறையே, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும். இதைத் தவிர, ஆங்கிலோ-இந்திய சமூக மக்களுக்கு லோக்சபாவில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை நியமிக்கலாம்.
ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள்
பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தால், பிற கட்சிகளிடம் இருந்தோ, சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி அமைக்கலாம்.
காங்கிரஸ் எதிர்ப்பு அலை
2004, 2009 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்ற போது பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது எதிர்ப்பு அலை வீசியது. பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு சாதகமாக அமைந்தது.
மோடி பிரதமர்
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது, பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவானது. பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.
பஞ்சாங்கம் கணிப்பு
அடுத்த மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் சித்திரை 9ஆம் தேதி அதாவது ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன்னதாக நடந்தால் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்று விகாரி வருஷத்திய ஸ்ரீநிவாசன் சுத்த திருக்கணித சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை கிடைக்கும்
ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன்பாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கினால் ஆளுங்கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் தேர்தல் வைத்தால் இழுபறி நிலை ஏற்படும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விகாரி வருஷத்திய ஆர்க்காடு சீதாராமய்யர் சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் எதிர்மறையாக கணிக்கப்பட்டுள்ளது.
பல கட்சிகள் கூட்டணி
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மந்திரியாக உள்ள சூரியன் மேஷத்தில் உச்ச பலம் பெற்று இருக்கிறார். அரசியலில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும், ஆளுங்கட்சியினர் இடையே பிளவு ஏற்படும் இது எதிர்கட்சியினருக்கு சாதகமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு
கடந்த 2004ம் ஆண்டில், பிப்ரவரி 29ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடந்தது. கடந்த 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு தேர்தல் அட்டவணை மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டு மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மே 16ம் தேதி நடந்தது. தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டு, அதிகபட்சமாக 75 நாட்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இந்த ஆண்டு எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்று பார்க்கலாம்.