தங்கையின் கணவனைக் கொன்ற ராவணன்- சூழ்ச்சியால் அண்ணனை பழிவாங்கிய சூர்ப்பனகை
ராமாயண இதிகாசத்தில் சீதையை கவர்ந்த ராவணனை போர் செய்து ராமர் கொன்றார் என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை: உலகின் முதல் விமானியே ராவணன்தான் என்று இலங்கையில் பெருமையாக பேசினாலும் ராவணன் வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் காரணம் சூர்ப்பனகைதான். ராவணவதம் நிகழக்காரணம் சூர்ப்பனகையா? அதெப்படி உயிருக்குயிரான அண்ணனின் மரணத்திற்கு சூர்ப்பனகை காரணமாக இருக்கமுடியும் என்று பலரும் யோசிக்கலாம். தனது தங்கையின் கணவன் என்றும் பாராமல் சொந்த மைத்துனனையே சூழ்ச்சி செய்து கொன்றான் ராவணன், அவனை பழிவாங்கவே திட்டம் போட்டு கொன்றாள் சூர்ப்பனை என்கின்றனர். அது என்ன கதை புதிதாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.
ராவணன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள் கும்பகர்ணன், விபீசனன். ஒரே ஒரு ஆசை தங்கை சூர்ப்பனகை. ராவணன் தான் தனது பிரியமான தங்கையான சூர்ப்பனகையை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனுக்கு திருமணம் செய்து வைத்தான். அவளும் தனது கணவனுடன் காதல் வாழ்க்கை நடத்தினாள்.
சிவனிடம் பெற்ற வரம் ஒருபக்கம் உலக ஆளவேண்டும் என்ற வெறி பக்கம் ராவணனை பிடித்து ஆட்டியது. ராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான். திக்விஷயம் செய்த ராவணன் மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான். இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான்.
ராவணன் சூழ்ச்சி
காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு சிறப்பு பிரிவினர். அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள்
அந்த காலகேயர்களும் இராவணனனைப் போலவே பிரம்மாவை நோக்கி தவமிருந்து அளவற்ற வரங்களை பெற்றவர்கள். அவர்களும் மனிதர்களைத் தவிர வேறு யாராலும் தங்களை வெல்ல அழிக்க முடியாத அளவு வரம் பெற்றவர்கள் எனவே அரக்கனான இராவணனனால் இவர்களை ஜெயிக்க இயலாது. இராவணனுக்கும் இது தெரியும் ஆனாலும் வீண் கர்வத்திற்காகக் காலகேயர்களை எதிர்த்தான்.
ராவணன் சூழ்ச்சி
ராவணன் காலகேயர்களை எதிர்க்க பல முக்கிய வீர தீர காலகேயர்கள் இல்லாத சமயமாக பார்த்து வீரமாக சென்றான். முக்கிய காலகேயர்கள் இல்லாததால் அந்த காலகேயர்கள் சார்பாக சூர்பனகையின் கணவர் வித்யுத்ஜிகவன் ராவணனை எதிர்த்தான். தங்கையின் கணவரை எதிர்த்து போரை நிறுத்தி விட்டு திரும்பிச் செல்லாமல் வீணான அகம்பாவத்தால் இராவணனன் அவருடன் போரிட்டு வெற்றி பெற முடியாமல் ஒரு சூழ்ச்சி செய்து இரக்கமின்றி தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தி வெற்றி பெற்றதாக கொக்கரித்தான்
ராவணன் வீழ்ச்சிக்கான விதை
கணவனின் மரண செய்தியறிந்து ஓடோடி வந்து சூர்ப்பனகை கதறி துடித்து அழுது புரண்டாள். ராவணனோ செத்தது தங்கையின் கணவன் என்ற கவலை எதுவும் இன்றி வெற்றி களிப்பில் இராவணன் தனது பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சென்று விட்டான். சூர்பனகை தன் கணவன் சடலத்தின் முன் சபதமேற்கிறாள் . உம்மை கொன்றவனை நான் கொல்வேன். என்னால் நேரடியாக முடியாவிட்டாலும் உன்னை சூழ்ச்சி செய்து கோன்றது போல் சூழ்ச்சி செய்தாவது கொடியவனான என் அண்ணன் ராவணனை அழிப்பேன் என வீர சபதமேற்றாள் சூர்ப்பனகை அதிலிருந்து தொடங்கியது ராவணன் வீழ்ச்சிக்கான விதை.
ராமரை பார்த்த சூர்ப்பனகை
ஒரு மானிடரால் மட்டும் தான் இராவணனைக் கொல்ல முடியும் என உணர்ந்தாள். கணவனை கொன்ற பின்னர் இலங்கைக்கு தங்கையை அழைத்து வந்தான் ராவணன். சூர்ப்பனகைக்கு நல்லது செய்வது போல நாடகமாடி ஒருவாறு தேற்றி கர தூஷணர்கள் என்னும் அரக்கர்கள் கட்டுபாட்டில் உள்ள பஞ்சவடி பகுதிக்கு அனுப்பி வைத்தான். அதை ஏற்றதுப்போல் நடந்துக்கொண்டு ராவணனை அழிக்க தக்கக் காலத்திற்காகவும் காத்திருந்தாள்
அங்கேதான் ராம லட்சுமணர்களைப் பார்த்து தனது நாடகத்தை தொடங்கினாள்.
சூர்ப்பனகை ஆனந்தம்
ராமரை திருமணம் செய்ய விரும்புவதாக பிடிவாதம் பிடித்து இலட்சுமணரால் மூக்கறுபட்டாள், உடனே பஞ்சவடியை ஆண்டு வந்த தன் மற்ற சகோதர்களான கர தூஷணாதிகளிடம் தனக்கேற்பட்ட அவமானத்தைக் கூறினாள். அவர்களும் பெரும் படையுடன் வந்து எதிர்த்தனர் அவர்களை தனியாக நின்று ராமர் அழித்ததையும் கண்ணாரக் கண்டாள். தான் இராவணனைக் கொல்ல சரியான நபரைக் கண்டுவிட்டோம் என ஆனந்தபட்டு நேரே இலங்கைக்குச் சென்றாள்
சீதையைக் கவர்ந்த ராவணன்
ராவணனுக்கு ஒரு சாபம் உள்ளது. தன் சகோதரனான குபேரனின் மருமகளானான ரம்பையை மானபங்கப்படுத்திய விருப்பமில்லாதப் பெண்ணை இனி நீ தொட்டால் தலை வெடித்துச் சாவாய் என ரம்பை சாபம் கொடுத்தாள். அதற்படி சீதையை தொட்டால் ராவணன் கெட்டான் என்று சூழ்ச்சி செய்தாள். சீதையின் அழகை புகழ்ந்தாள். சூர்பனகை விரித்த வலையில் மாட்டிய ராவணன் சீதையை சிறையெடுத்தான். ஆனாலும் தனக்குள்ள சாபத்தை எண்ணி அஞ்சியே சீதையை தொடவில்லை. சூர்பனகை எண்ணப்படியே ராமனால் ராவணன் வதம் செய்யப்பட்டான்.
சூர்ப்பனகையின் பதிபக்தி
ராமாயணத்தை படிக்கும் பலருக்கும் சூர்ப்பனகையின் ஒரு முகம்தான் தெரியும், அரக்கி, ராவணன் சகோதரி, ராமாயண போருக்கு காரணமானவள் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் தனது கணவன் மீது கொண்ட காதலும், பதி பக்தியுமே அவளை அவ்வாறு செய்ய வைத்தது. தனது கணவனைக் கொன்றவன் தனது அண்ணனாகவே இருந்தாலும் சபதம் போது பழிவாங்கி அந்த சபதத்தை நிறைவேற்றினாள். ராவணன் மரணத்திற்குப் பின்னர் இறுதியில் நாட்டை விட்டே வெளியேறி கண்காணத இடத்திற்கு சென்று விட்டாள். இது வால்மீகி எழுதிய ராமாயணத்தின் பிற்சேர்க்கையில் கூறப்பட்டுள்ளது.