நீர் நிலைகளை சுத்தம் செய்யும் விநாயகர்... பிள்ளையார் விசர்ஜனம் தத்துவம் தெரியுமா?
மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பதை உணர்த்தும் வகையிலேயே விநாயகர் சதுர்த்தி நாளில் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை பூஜை செய்து விட்டு நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் செய்ய பிள்ளையார் முதல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட விநாயகர் வரை வைத்து வழிபடுகின்றனர். மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பூஜை செய்த பின்னரை அந்த சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கதைகள் உலா வருகின்றன.
இது மிகப்பெரிய தத்துவம், மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பதை உணர்த்தும் கையிலேயே களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை பூஜை செய்து விட்டு நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.
முதன்மையானவன்
ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப்பட்டு வரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் கணபதீம் என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு ஜ்யேஷ்ட ராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு. இதற்கு முதலில் பிறந்தவன் என்பது பொருள்.
சுதந்திரத்திற்கு முன்பே கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 19ஆம் நூற்றாண்டில் 1893 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாக கொண்டாடப்பட்டது.
மகாபாரத்திற்காக தியாகம்
மகாபாரதக்கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார். பழங்காலத்தில் ஒரு நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும், அதனை எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பதுண்டு. ஓங்கார வடிவமாகவும், உலக இயக்கத்திற்கு காரணமாகவும், சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளையாகவும் விளங்கிய விநாயகர் தன் நிலையில் இருந்து இறங்கி ஒரு உதவியாளரைப் போல வியாசர் முன் அமர்ந்து, பாரதத்தின் லட்சம் ஸ்லோகங்களையும் எழுதி முடித்தார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்க்கும் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி கொண்டார். மகாபாரதம் ஒரு தர்ம காவியம். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த தியாகத்தைச் செய்தார்.
ஐந்து கரங்கள்
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்தியகை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார். மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.
சிலைகளை கரைப்பது ஏன்
விநாயகரை மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் வழிபட்டு சிலைகளை கரைக்கின்றனர். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பதை உணர்த்தும் வகையிலேயே மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். எனவேதான் விநாயகர் சிலைகளை பத்து நாட்கள் பூஜை செய்து கடலில், ஆறு, குளங்களில் கரைத்து விடுகின்றனர்.
புதிய தண்ணீர் சுத்தமாகும்
ஆடி மாதம் தென்மேற்குப் பருவமழை பெய்து ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளம் பெருகி வரும். இந்த தண்ணீர் சுத்தமாக வேண்டும் என்பதற்காகவும் நீர் நிலைகளில் உள்ள மீன்கள், ஆமைகள் தூய்மையடைய வேண்டும் என்பதற்காகவே ஆவணி மாதத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜிக்கப்பட்ட களி மண்ணால் செய்த விநாயகரை நீர் நிலைகளில் கரைத்து வழிபடுகின்றனர்.