கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முருக பக்தர்கள் சொல்வது ஏன்?
அரோகரா என்ற சொல்லின் முழுமை "அர கரோ கரா", அதாவது “இறைவா, எங்களின் துன்பங்களை நீக்கி, அருள் புரிவாயாக என்று முருகனை வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
சென்னை: பெருமாளை வணங்கும் போது கோவிந்தா கோவிந்தா என்றும் முருகப்பெருமானை வணங்கும் போது கந்தனுக்கு அரோகரா என்றும் முழக்கமிட்டு வணங்குவார்கள் பக்தர்கள். கந்த சஷ்டி கவசம் பற்றி சர்ச்சையில் ஒருவாரம் கழித்து ரஜினிகாந்த் போட்ட ஒரு ட்வீட் 'கந்தனுக்கு அரோகரா' என்ற வார்த்தையை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியிருக்கிறது.
Recommended Video
அரோகரா என்று சொல்லி முருகனை வணங்கினாலே உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கும். அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கம்தான் அரோஹரா. இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக என்பதாகும்.
சிவனை வணங்கும் சைவ சமயத்தினர் ஹர ஹர மகாதேவா என்று சொல்லி வணங்குவார்கள். அர ஹர ஹர என்றும் சொல்லி வணங்குவார்கள். சைவ சமய குறவர்களின் ஒருவரான திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்து சென்றவர்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக ஏலே லோ ஐலசா... ஏலே லோ என்று பாடிக்கொண்டு சென்றார்கள்.
இதைக்கேட்ட திருஞானசம்பந்தர், அதற்கான அர்த்தத்தை கேட்டார். அதன் பொருளை யாராலும் சொல்ல முடியவில்லை. உடனே திருஞானசம்பந்தர், பொருள் இல்லாத ஒன்றை சொல்வதை விட அர ஹர ஹர என்று சொல்லுங்கள் என்று கற்றுக்கொடுத்தார். அதன்பிறகுதான் அர ஹரோ ஹர என்று சொன்னார்கள். அதுவே நாளடைவில் சுருங்கி, அரோஹரா என்றாகி விட்டது.
கந்தனுக்கு அரோகரா.. எம்மதமும் சம்மதமே.. தமிழக அரசுக்கு நன்றி... ரஜினி போட்ட திடீர் டிவீட்!
அரோகரா என்பதை,அர+ஓ+ஹரா என பிரிக்கலாம்,அதாவது அரண்,ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும் அவர் புதல்வர் முருகன் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள்,முருகனை வணக்கும்போது அரோகரா என்று முழக்கமிடுகின்றனர்.
சைவர்கள் இந்த வார்த்தையை சொல்லாவிட்டாலும் முருகனை வணங்கும் கௌமாரர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் வீரவேல்... கந்தனுக்கு அரோகரா என்றெல்லாம் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டு வணங்குகின்றனர்.
வெற்றி வேலைக் கையில் ஏந்தியிருக்கும் இறைவா, உன் வேலால் எங்கள் துன்பங்களை நீக்கி, எங்களுக்கு என்றுமே அருள் புரிவாயாக என்று நம்பிக்கையோடு வணங்குகின்றனர்.
இப்போது உள்ள சூழ்நிலையில் எல்லோரும் சொல்வோம் கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.