குருஷேத்திர போரில் திருதராஷ்டிரன் 100 பிள்ளைகளை பறிகொடுக்க காரணம் இதுதான்
மதுரை: திணை விதைத்தவன் திணை அறுப்பான்... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் நம்முடைய முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். எனவே நாம் வாழும்போது கூடியமட்டும் மற்ற ஜீவராசிகளை துன்புறுத்தாமல் அவற்றிடம் அன்பு செலுத்த வேண்டும். மஹாபாரத காவியமும் இதைத்தான் வலியுறுத்துகின்றது. 100 பிள்ளைகளை பெற்றும் ஒருவர் கூட மிஞ்சாமல் மரணமடைய காரணம் என்ன என்று பகவான் கிருஷ்ணரிடம் வேதனையோடு திருதராஷ்டிரன் கேட்க அதற்கு கிருஷ்ணர் சொன்ன பதில்தான் ஆச்சரியமானது. முற்பிறவியில் செய்த பாவத்தின் சம்பளத்தைதான்
மனிதனின் பிறப்பு என்பது ஒருவர் தான் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவும், அவருடைய முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலும் தான் ஏற்படுகிறது. முற்பிறவியில் அதிக புண்ணியங்களும் தான தர்மங்களும் செய்திருந்தால், மறுபிறவியில் நல்ல ஆத்மாவாக பிறப்பார்கள்.
மாறாக, முற்பிறவியில் மற்றவர்களை கொடுமைப்படுத்தியும், நம்பிக்கை துரோகம், மோசடி செய்து சொத்து சேர்த்திருந்தாலும், இப்பிறவியில் மற்றவர்கள் அவருக்கு அதே மாதிரியான துரோகத்தையும் கொடுமையையும் அளிப்பார்கள். அதே போல் தான், முற்பிறவியில் ஒருவர் தனக்கு தெரியாமல் யாருக்காவது அல்லது எந்த ஜீவராசிக்காவது கொடுமை செய்திருந்தாலும் சரி, மறுபிறவியில் அவருக்கு நிச்சயம் அதற்கான தண்டனை காத்திருக்கும் என்று வேதங்களும் புராணங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
திருதாஷ்டிரனும் காந்தாரியும்
குருஷேத்திரப் போரில் பகவான் கிருஷ்ணரின் கருணையால் பாண்டவர்கள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். போரில் துரியோதனன் தலைமையிலான கவுரப்படைகள் தோற்றதோடு, துரியோதனனும் அவனது 99 சகோதரர்களும் மரணத்தை தழுவினார்கள். கவுரவர்களில் மிச்சமிருந்தது, திருதாஷ்டிரன், காந்தாரி என இருவர் மட்டும் தான்.
100 பிள்ளைகளும் இறக்க காரணம் என்ன
போரில் தன்னுடைய வாரிசுகளை பறிகொடுத்த துக்கத்தில் இருந்த திருதாஷ்டிரனுக்கு ஆறுதல் அளிக்க எண்ணி, அவரை சந்தித்து ஆறுதல் கூறி அவரின் மனதை தேற்ற எண்ணினார். அப்போது திருதாஷ்டிரன் பகவான் கிருஷ்ணரை பார்த்து, கிருஷ்ணா... கண்கள் இருந்து பார்வையில்லாமல் பிறந்த நான், துரியோதனன் உள்ளிட்ட 100 கவரிவர்களின் தந்தையாக இருந்த போதிலும், ஒரு நாட்டின் மன்னனாக இருந்து என்னுடைய மக்களுக்கு நல்லதையே செய்து நல்லாட்சியே புரிந்து வந்தேன். அப்படி இருந்தும் என்னுடைய 100 பிள்ளைகளில் ஒருவர் கூட மிச்சமில்லாமல் அனைவரும் இறப்பதற்கு என்ன காரணம்? நான் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன என்று நா தழுதழுக்க கேட்டார்.
சமையல்காரனின் கைப்பக்குவம்
திருதராஷ்டிரன் அப்படி கேட்டதும், பகவான் கிருஷ்ணர் புன்னதைத்துக்கொண்டு, நேரடியாக பதிலளிக்காமல், திருதாஷ்டிரரே, நான் உமக்கு ஒரு கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, நீதி நெறி தவறாமலும், மக்களின் குணநலன்களை அறிந்தும் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான் ஒரு மன்னன். அந்த மன்னனின் அரண்மனையில் ஒரு சமையல் கலைஞர் இருந்தார். அவருடைய கைப்பக்குவம் அற்புதமாக இருக்கும். அவர் சமைக்கும் உணவு வகைகளையே மன்னரும் விரும்பி உண்டு வந்தார்.
வீபரீத முயற்சி
நிறைய உணவு வகைகளை மன்னருக்கு பிடித்தவாறு சமைத்து பரிமாறுவதில் அவனுக்கு நிகர் அந்த நாட்டில் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்த இறுமாப்பில், மன்னனின் மனதில் தான் நிரந்தரமாக இடம்பிடித்து வெகு சீக்கிரத்தில் தானும் இந்த நாட்டில் பெரிய செல்வந்தராக வேண்டும் என்று பேராசைப் பட்டான். அந்த பேராசையால் ஒரு நாள் விபரீத முயற்சியில் இறங்க முற்பட்டான்.
அன்னப்பறவை குஞ்சு
அரண்மனையின் அந்தப்புரத்திலுள்ள குளத்தில் மன்னர் அதிக அளவில் அன்னப்பறவைகளை வளர்த்து வந்தார். ஒரு நாள் சமையல்காரன், அன்னப்பறவையின் குஞ்சுகளில் ஒன்றை யாருக்கும் தெரியாமல், கொன்று மன்னருக்கு சமைத்து பரிமாறினான். மன்னரும் அந்த உணவு எந்த மாதிரியானது என்று தெரியாமலேயே ருசித்து சாப்பிட்டு விட்டார். மன்னருக்கு அந்த ருசி பிடித்துப் போகவே, சமையல்காரனிடம், தினமும் தனக்கு அதே உணவு வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சமையல்காரனும் மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, நாள்தோறும் ஒரு அன்னப்பறவையின் குஞ்சை கொன்று மன்னருக்கு சமைத்து போட்டார்.
யார் குற்றவாளி
இந்த இடத்தில் கதை சொல்வதை நிறுத்திய பகவான் கிருஷ்ணர், புன்னகைத்துக்கொண்டே, திருதராஷ்டிரா... இதில் மன்னரின் மனதில் இடம்பிடிக்க நினைத்து, அன்னப்பறவையின் குஞ்சை கொன்று மன்னருக்கு பரிமாறிய சமையல்காரன் குற்றவாளியா? அல்லது கண்ணிருந்தும் குருடனாக, அந்த உணவைப் பற்றிய விவரம் அறியாமல் அந்த உணவை ருசித்து சாப்பிட்ட மன்னன் குற்றவாளியா என்று கேட்டார். உடனே, திருதராஷ்டிரன், இதில் என்ன சந்தேகம், தான் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதே அறியாமல் ருசித்து உண்டுவிட்டு, அதையோ நாள்தோறும் சமைத்து பரிமாறுமாறு கட்டளையிட்ட மன்னன் தான் குற்றவாளி என்று பதிலளித்தார்.
அந்த குற்றவாளி நீதான்
பகவான் கிருஷ்ணர் உடனே, திருதராஷ்டிரா நீ நீதி நெறி தவறாதவர் என்பதை நிரூபித்துவிட்டாய். அதனால் தான் உனக்கு சிறந்த மனைவியும், அழகான சிறந்த நூறு குழந்தைகளும் கிடைத்தனர். ஆனாலும், நீ குருடனாக பிறந்து துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய். உன்னுடைய 100 வாரிசுகளையும் போரில் இழந்தாய். அதற்கான காரணம் என்ன தெரியுமா?... உணவைப் பற்றி அறியாமல் கண்ணிருந்தும் குருடனாக இருந்துகொண்டு அந்த அன்னப்பறவையின் குஞ்சை சாப்பிட்ட அந்த மன்னன் நீதான் என்று சொன்னார்.
முற்பிறவியில் செய்த பாவம்
இறந்துபோன தன்னுடைய குஞ்சுகளை நினைத்து அந்த அன்னப்பறவைகள் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். தாயான அந்த அன்னப்பறவைகளுக்கு ஏற்பட்ட வேதனையை நீயும் படவேண்டும் என்பதற்காகவே, இப்பிறவியில் நீயும் குருடனாக பிறந்தாய். உனக்கு நூறு குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் அவர்களை குருஷேத்திரப்போரில் பறிகொடுத்து, இப்போது குழந்தைகளை பறிகொடுத்த துக்கத்தில் பிதற்றிக்கொண்டிருக்கிறாய். இப்போது புரிகிறதா?... நீ செய்த பாவம் என்னவென்று?. முற்பிறவியில் செய்த பாவத்திற்கு பிரதிபலனை இந்தப் பிறவியில் அனுபவித்துக்கொண்டிருக்கிறாய் என்று பதிலளித்தார்
பகவான் கிருஷ்ணர்.
நல்ல பிறவி வேண்டுமா
உடனே, திருதராஷ்டிரன், முற்பிறவியில் கண்ணிருந்தும், என்னுடைய அறியாமையால், நான் செய்த பாவத்திற்காக இப்பிறவியில் குருடனாக பிறந்ததோடு, என்னுடைய நூறு குழந்தைகளையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேனே என்று அழுது புலம்பினார். ஆகவே, நாமும் முடிந்தவரையில் இப்பிறவியில் மற்றவர்களை ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் தான தர்மங்களை செய்து விட்டு, இவ்வுலகத்தை விட்டு செல்வோம். மீண்டும் நல்லதொரு பிறவி எடுப்போம்.