உலக நீரிழிவு தினம்: உங்களுக்கு சுகர் இருக்கா... குரு சுக்ரன் எப்படி இருக்கு பாருங்க
குருவும் சுக்கிரனும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ நீசமடைந்திருந்தாலோ நோய் பாதிப்புகள் ஏற்படும்.
சென்னை: சர்க்கரை நோய் பரம்பரையால் ஏற்படுகிறது என்றாலும் அதற்கு ஜாதக காரணங்களும் இருக்கின்றன. சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆசிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். உலக சர்க்கரை நோய் தினமான இன்று சர்க்கரை நோய் பாதிப்புக்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
உலகில் ஏறத்தாழ 40 கோடி மக்களுக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கிறது. கண் பார்வை தெரியாமல் போவதற்கு, கை கால்களை அகற்றுவதற்கு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு நீரிழிவு நோயே முக்கியமான காரணமாக இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் மட்டும், நீரிழிவு நோயின் நேரடித் தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர். 2030ஆம் ஆண்டில் நிகழும் மரணங்களுக்கு ஏழாவது முக்கியமான காரணமாக இது இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
சுக்கிரன் சுகர் தொடர்பு
சுப கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள்.
குருவும் சுக்கிரனும் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்து விட்டால் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் குரு, சுக்கிரன் மறைந்திருந்தாலோ மகரத்தில் குரு நீசமடைந்திருந்தாலோ கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைந்திருந்தாலோ ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குருபகவான் அருள்
ஜாதகத்தில் குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் கட்டுப்படுத்துவார்கள். ஆனால் குரு நீசம் வக்ரமடைந்தவர்களுக்கு எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் நோய்கள் கட்டுப்படுவதில்லை.
சர்க்கரை நோய் பாதிப்பு
ஜாதக கட்டத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசாபுத்தி காலமான 20 ஆண்டு காலத்தில் ராஜயோக பலன்களை கொடுப்பார். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிடைக்கும்.
சூரியனை வணங்கலாம்
தினசரி அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது சிறந்த பரிகாரம். ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். யோகா, தியானம் செய்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
நெய் சர்க்கரை தானம்
சரியான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, எதற்கும் கலங்காத மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம். ஜாதக ரீதியான பரிகாரங்களையும் மேற்கொள்ளலாம். மகாலட்சுமி ஆலயத்தில் 9 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு வெள்ளை நிற ஆடை தானமாக அளிக்கலாம். நெய், சர்க்கரை ஆகியவைகளை கோவிலுக்கு தானமாக அளிக்கலாம்.
பரிகாரம் என்ன
செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.
இனிப்பு பலகாரம்
வியாழன் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை பொங்கல் படைத்து பிரசாதம் கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சர்க்கரை, பாசிப்பருப்பு, வாழைப்பழம் சேர்த்த இனிப்பு செய்து கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். வெள்ளை நிற பசுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். இதன் மூலம் மரபு ரீதியாக ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.