கால் சென்டர் வேலையில் கை நிறைய சம்பாதிக்க ஆசையா? உங்க ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறார் என பாருங்கள்!
Recommended Video
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
ஹலோ' என்றவார்த்தையை உச்சரிக்காத ஆள் உலகத்தில் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். தற்போது பிறந்த குழந்தைகள் கூட மொபைல் போனுடன் தான் பிறக்கின்றனர். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த, அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வு காண முடியும் என்று உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலக ஹலோ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக 1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலகஹலோ தினம் கொண்டாடப்பட்டது.
ஜோதிடத்தில் ஹலோவுக்கான கிரகம் எது தெரியுமா? ஜோதிடத்தில் நட்புறவுக்கும் தகவல் தொடர்புக்கும் காரக கிரகம் புதன் தான்.
புதன்:
கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத் துறை, தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வ்சீகரத்தன்மை, அறிவாற்றல், தந்திரம், கலகலப்பானவர், கோழைத்தனம் ஆகியவற்றின் காரகனான புதன்தான் நட்பை வளர்க்கவும் காரக கிரகம் ஆகிறது.
மிதுனம் :
அதேப்போல் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் புதனுக்குறிய வீடாகி அதுவே தகவல் தொடர்பை குறிக்கும் பாவமாகிறது. எனவே ஒருவரின் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாம் வீடு, கன்னி, மிதுனம், புதனிருக்கும் வீடு ஆகியவற்றை கொண்டு ஒருவரின் நட்பையும் தகவல் தொடர்பையும் தீர்மானிக்க முடியும். மேலும் காமம், புத்திசாலித்தனம், கல்வி, கவர்ச்சி, ரகசியத் தொடர்பு, போட்டி, இணக்கமாக இருத்தல் ஆகியவற்றை குறிக்குமிடமாகவும் அமைகிறது.
மூன்றாம் பாவகம் :
இந்த மூன்றாம் பாவகத்தை ஜெயஸ்தானம், வீரியஸ்தானம், சகோதிர ஸ்தானம், என்று வேறு பெயர்களால் அழைக்கப்படும். இந்த மூன்றாம் பாவம் அமைந்துள்ள ராசியின் அதிபதியை சகோதிர ஸ்தானாதிபதி, ஜெயாதிபதி, (அ) மூன்றாமதிபதி என்று அழைக்கப் படுவார்.
மூன்றாம் பாவம் எழுத்தினைக் குறிக்கும். எனவே எல்லா வித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும், ஒப்பந்தங்களையும் மூன்றாம் பாவமே குறிக்கும்.
மூன்றாம் பாவம் இடமாற்றங்களையும், சிறு பயணங்களையும், பக்கத்து வீடு, பக்கத்து ஊர், அண்டை மாநிலம், அண்டை நாடுகள் போன்றவற்றைகளையும், சொத்துக்களை இழத்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று போன்றவற்றையும் குறிக்கும்.
ஆரம்ப கல்வி கற்பதற்கேற்ற மனச்சார்பு, அறிவு, குறுகிய பயணம், சாலை, சைக்கிள், பஸ், கடிதம், கணிதம், தபால் நிலையம், தொலைபேசி, கைபேசி, தொலைக்காட்சி, ரேடியோ செய்திகள், எதையும் சுருக்குதல், அடையாள சின்னங்கள், சான்றிதழ்கள், காசோலைகள், உலகில் உள்ள அனைத்து பதிவுகள், மத்தியஸ்தம், தூது செல்லுதல், பத்திரிகைகள், விளம்பரம், கையெழுத்து, நூலகம், அச்சு, குத்தகை, வதந்திகள், கோள் சொல்லுதல், மனக்குழப்பம், புத்தி பேதலித்தல், ஏற்கனவே இருப்பவைகளுடன் பலவற்றை புதிதாக சேர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய பரிணாமங்களை உருவாக்குதல் போன்றவைகள் மூன்றாம் பாவத்தின் காரகங்களாகும்.
ஏழாம் பாவம்:
ஏழாம் பாவத்தை ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உரிய பாவமாக நம் முன்னோர்கள் கூறினார்கள். கணவன், மனைவி உறவினை தவிர்த்து மற்ற உறவு முறைகளான அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, மாமா, மாமி, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, குழந்தை போன்ற உறவுகள்.
ஏழாம் பாவம் என்பது ஜாதகருக்கு சமமான நபர்களை குறிப்பதால் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல், வாடிக்கையாளரையும், ஜாதகருக்கு உள்ள பொதுஜன தொடர்பினையும், ஜாதகருக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தையும், ஜாதகர் மற்றவரிடம் சகஜமாக பழகுபவரா அல்லது பொருளாதார ரீதியில் பழகுபவரா என்பதையும், மற்றவர்களால் ஜாதகர் ஏமாற்ற படுவாரா என்பதையும் 7 ம் பாவம் மூலம் ஒருவரின் ஜாதகத்தில் அறியலாம்.
ஜாதகரின் திருமண வாழ்க்கை, வாழ்க்கை துணை பற்றின விபரங்கள், பொதுமக்களின் ஆதரவு, பொதுக்கூட்டங்கள், திருடனை பற்றின விபரங்கள், எதிர்பாலின ஸ்பரிச சுக பரிமாற்றங்கள், மற்றவருடனான நீண்ட நாள் பழக்க வழக்கங்கள், வியாபாரத்தில் பங்குதாரர்கள், ஜாதகரின் வெளிப்படையான குணம், எதிலும் மற்றவரை இணைத்து கொள்ளுதல், இரண்டாவது குழந்தை, மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், பிறரைச் சார்ந்திருத்தல், போன்றவை ஏழாம் பாவத்தின் காரகங்களாகும்.
11ம் பாவம் :
ஒருவருடைய விருப்பம், அபிலாசைகள், குறிக்கோள், வெற்றிகள், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி (வைட்டமின்கள்), ஜாதகரின் நெருங்கிய நண்பர்கள், ஜாதகரின் நலம் விரும்பிகள், ஜாதகரை முகஸ்துதி செய்பவர்கள், சேமிக்கும் பழக்க வழக்கங்கள், முயற்சிகள் சித்தியாதல், ஆசைகள் நிறைவேறிய பின் கிடைக்கும் திருப்தி, நீடித்த நட்பு, ஒருமித்த கருத்து உடையவர்களின் குழு, சங்கம், கூட்டம், மாநாடு, தந்தை வழி சித்தப்பா, உச்ச நிலை கல்வி, முழு அறிவை பெறுதல், ஒரு துறையில் முழுமையாக பயின்று டாக்டர் பட்டம் பெறுதல், புத்தி கூர்மை, பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், வியாதி குணமடைதல், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல் போன்றவைகளும் 11ம் பாவத்தின் காரகங்களாகும்.
ஒருவருக்கு ஜாதகத்தில் புதன், மூன்றாமிடம், ஏழாமிடம் மற்றும் பதினோறாமிடம் இம்மூன்றும் நல்ல நிலையில் தொடர்பு பெற்று அதன் அதிபதிகள் நட்பாகவும் அமைந்துவிட்டால் அவர்கள் அனைவரிடமும் சிறந்த நட்புடன் விளங்குவர். அதிலும் லக்னம் ஜன வசிய ராசியான துலாம் மற்றும் ரிஷபமாக இருந்துவிட்டால் அனைவரும் தானை வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.
தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கும் ராகு-கேது:
காற்றிலே பரவக்கூடிய விஷயங்களை அதிவேகமாக பரப்புவதில் ராகு-கேதுக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவருடைய் வாக்கு ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். என்றாலும், வாக்கு ஸ்தானத்தில் ராகு நின்றால் திருமண வயது வரை அதிகம் பேசுபவர்களாகவும் கேது நின்றால் திருமண வயதை கடந்தப்பின் அதிகம் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல ராகுவும் கேதுவும் மூன்றாம் பாவத்தில் நிற்கப்பெற்றவர்கள் மிகச்சிறந்த தகவல் தொடர்பாளர்களாக இருப்பார்கள்.
காற்று ராசிகள்:
ஒருவருடைய ஜாதகத்தில் மேஷம்/சிம்மம்/தனுசு ஆகிய லக்னங்கள் அமைந்து காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை மூன்றாம் பாவமாக அமைந்து அங்கு புதன் ராகு சாரத்தில் அதாவது திருவாதிரை/சுவாதி/சதையம் ஆகிய நக்ஷத்திர பாதங்களில் அமைய அவர்கள் தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் காற்று ராசிகளில் சந்திரன் நின்று புதன் ராகு சேர்க்கை பெற தகவல் தொடர்பில் புகழ் பெறுவார்கள்.
தகவல் தொடர்பில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு யாருக்கு?
1. காலபுருஷ லக்னமான மேஷ லக்னமாகி மூன்றாம் பாவத்தில் புதன் ஆட்சி பெற்று நிற்பது மற்றும் சந்திரனின் வீடாகிய கடக லக்னமாகி மூன்றாம் வீட்டில் புதன் உச்சம் பெற்று நிற்பது.
2. ஜென வசிய ராசிகளான ரிஷபமும் துலாமும் லக்னமாகி வாக்கு ஸ்தானத்தில் புதன் நிற்பது.
3. எந்த லக்னமாக இருந்தாலும் மூன்றாம் பாவத்திலோ அல்லது மிதுனத்திலோ புதன் நிற்பது.
4. காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் மூன்றாம் பாவமாக அமைந்து லக்னத்திலோ அல்லது மூன்றாம் பாவத்திலோ புதன் நிற்பது.
5. காற்று ராசி அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி காற்று ராசிகளில் சேர்க்கை பெற்று நிற்பது அல்லது பரிவர்தனை பெறுவது.
6. புதன் ராகு சாரத்திலும் ராகு புதன் சாரத்திலும் சார பரிவர்த்தனை பெறுவது
7. புதன் ஆத்மகாரகனாக அமைய பெறுவது மற்றும் பஞ்ச மகா புருஷ யோகங்களில் புதனால் ஏற்படும் பத்ர யோகம் பெற்று விளங்குவது.
8. லக்னம் கன்னியாகி அதில் புதன் உச்சம் பெற்று பத்தாம் வீடும் புதனின் வீடாக அமைவது, பத்தாமிடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று நிற்பது, சனியும் புதனும் சேர்க்கை பெற்று மிதுனத்தில் நிற்பது ஆகியவை தகவல் தொடர்பில் தொழில் அமையும் அமைப்பாகும்.
உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர் ஜாதகம்:
உலக அமைதிக்காகவும், நட்புறவை வளர்த்ததற்காகவும் 1989ம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்ற தலாய் லாமா (லாமா தொந்துப்) அவர்களின் ஜாதகத்தில் ஜென வசிய ராசியான சுக்கிரனின் ரிஷப லக்னமாகி வாக்கு ஸ்தானம் மற்றும் கால புருஷ மூன்றாம் பாவமான மிதுனத்தில் கேது மற்றும் சூரியனோடு சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகமும் பெற்று ஜீவன ஸ்தானம் எனப்படும் பத்தாமிடம் காற்று ராசி மற்றும் சனியின் வீடாகிய கும்பத்தில் சனி ஆட்சி பெற்று தனது திர்கோண பார்வையால் புதனை பார்ப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சனைஸ்வர பகவான் காற்று ராசியில் ஆட்சி பெற்றும் லக்னம் மற்றும் சந்திரன் இரண்டிற்கும் கேந்திரத்தில் நின்று சச யோகம் பெற்றதும் ஒரு சிறப்பான ஜாதக அமைப்பாகும்.
நட்பு வளர்க்கும் பாண்டவ தூத பெருமாள்:
உங்களுக்கு அக்கம் பக்கத்தார், உடன் பணிபுரிபவர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் பகைமை ஏற்பட்டு பிரச்சனை ஏற்படுகிறதா? நீங்கள் செல்ல வேண்டிய திருக்கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது.
புதனின் அதிதேவதையான விஷ்னு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவில், (ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரக் கோவில் )- காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணர் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் புன்னகையோடு காட்சி யளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.
துரியோதனனிடம் கிருஷ்ணர் தூது
மஹாபாரத காலத்தில், பாண்டவர் களில் மூத்தவரான தருமர் சூதாட் டத்தில் கௌரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார். அவர்களுக்கு ஒரு வீடாவது தர வேண்டுமென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்க தூது சென்றார்.
எனவே தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு மத்யஸ்தம், முகவான்மை ஆகிய பணிகளை மேற்கொள்பவர்கள் காஞ்சி பாண்டவ தூத பெருமாளை வணங்கிவருவது சிறப்பாகும்.