எதிர்காலத்திற்கு சேமிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உலக சேமிப்பு தினம் பற்றிய ஜோதிட செய்திகள்!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று உலக சேமிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் 'உலக சிக்கன தினம்" என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
'இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு' என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்கள் குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த தொகைக்கு உத்தரவாதமும் எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.
சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும, சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.
ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.
ஆடம்பரம், ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி வி;டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். பொதுவாக நாட்டார் வழக்கில் விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். ஆடம்பரம், ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம்.
பொதுவாக, செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சிக்கனம் என்பது தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி. மூன்றாவதாக ஆடம்பரம் என்பது, மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதி மீறி செலவு செய்வது. நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது, சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.
தேசிய பொருளாதாரத்தைப் பொருத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப மட்டத்திலும் சரி, தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.
சிக்கனமும் சேமிப்பும் குறித்து ஜோதிடம் கூறும் கருத்துக்கள்:
ஒருவருடைய சேமிப்பை ஆராயும் முன் அவருடைய வருவாயை ஆராய்து அறிதல் வேண்டும். வருவாயை பொருத்தே சிக்கனமும் சேமிக்கும் குணமும் அமைந்து விடுகிறது. ஜாதகத்தில் தனகாரகன் குரு, செல்வ செழிப்பின் காரகர் சுக்கிரன், சேமிப்பின் காரகர் புதன் ஆகிய கிரஹங்களின் பலத்தினை பொருத்துதான் ஒருவரின் சேமிக்கும் தன்மை அமைகிறது என்றால் மிகையாகது.
ஒருவர் ஜாதகத்தில் ராஜ கிரஹங்களான சூரியன் மற்றும் சந்திரனின் நிலை பலமாக இருந்தாலே அவருக்கு அனைத்து யோகங்களும் அமைந்துவிடும்.
ஒரு ஜாதகர் எந்த ஒரு நன்மையை அடையவும் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். லக்னத்தின் பலம் என்பது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு இல்லாமல் லக்னத்தில் இயற்க்கை சுபர்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய கிரஹங்களின் தொடர்பு பெற்று நிற்பது, அசுப கிரஹங்களின் தொடர்பு அற்று நிற்பது, லக்னத்திற்க்கு மற்றும் லக்னாதிபதிக்கு குரு பார்வை இருப்பது, லக்னாதிபதி திரிகோணஸ்தானங்களான 1,5,9 ஆகிய இடங்களில் நிற்பது ஆகியவை ஆகும்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் என்பது குடும்பம், வாக்கு மற்றும் தனஸ்தானம் எனப்படுகிறது. இரண்டாமிடத்தின் தன்மையை கொண்டு ஒருவரின் வருவாய் மற்றும் அது வரும் விததினை அறிய முடியும்.
மேலும் ஜீவனஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாமிடமும் ஒருவரின் தொழில் மற்றும் வருவாய் ஈட்டும் தன்மையை குறிக்கிறது. பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதியின் தன்மையை கொண்டே ஜாதகர் சுய தொழில் செய்வார அல்லது அடுத்தவரிடம் வேலைக்கு செல்வாரா? போன்ற விஷயங்களை அறிய முடியும்.
அர்த்த திரிகோணம்:
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,6,10 ஆகிய வீடுகள் அர்த்த திரிகோணம் எனப்படுகிறது. அர்த்த திரிகோணாதிபதிகளின் பலமான தொடர்புகள் ஒருவருக்கு நிரந்தர தொழில் மற்றும் அதன்மூலம் வரும் வருவாயை குறிக்கிறது.
பணபர கேந்திரம்:
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2,5,8,11 ஆகிய வீடுகள் பண பர கேந்திரங்கள் எனப்படும். பணபர கேந்திரங்கள், அல்லது அதன் அதிபதிகள் ஸ்திர ராசிகளாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு திடீர் தீடீரென பணவரவு அடிக்கடி அமைந்துவிடுகிறது.
சிக்கனத்தின் காரகர் சனி:
சிக்கனத்தின் காரகர் என்றாலே சனைச்சரன் எனும் சனி பகவான் முதன்மை காரகராகவும், புத பகவான் இரண்டாம் நிலை காரகராகவும் கூறலாம். மகர/கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றும், சனி பன்னிரெண்டில் உச்சமாகும் விருச்சிக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிக்கனவாதிகளாக இருப்பதை காண முடிகிறது.
சேமிப்பை தரும் புதன்:
சேமிப்பின் காரகராக புதனைத்தான் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவம் பலமிழ்ந்த நிலையில் புதன் மற்றும் குருவின் தொடர்பு சிறந்த வருமானம் மற்றும் சேமிப்பை தருகிறது. புதன் அசுப தொடர்புகள் பெற்ற நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. புதனோடு சுக்கிரனின் சேர்க்கை குறைந்த கால முதலீடு, புதனோடு குருவின் சேர்க்கை மத்திம கால முதலீடு மற்றும் புதனோடு சனியின் சேர்க்கை நீண்ட கால முதலீடு ஆகியவற்றை குறிக்கிறது.
தவறான சேமிப்பு மற்றும் முதலீடு:
பலமிழ்ந்த சூரியன், குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவை தவறான வழிகளில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் குறிக்கிறது. முக்கியமாக புதனோடு ராகு சேர்க்கை பெறும்போது சேமிப்பும் முதலீடும் தவறான பாதையில் சென்று நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஒருவருக்கு 8 மற்றும் 11ம் வீடுகள், அதன் அதிபதிகள் மற்றும் பலமிழ்ந்த புதன் மற்றும் குருவின் நிலைகள் ஜாதகர் எவ்வளவு சம்பதித்தாலும் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சுக்கிரனும் தேய்பிறை சந்திரனும்:
ஒரு ஜாதகர் அதிக செலவாளியாக திகழ சுக்கிரன் முக்கிய காரகர் ஆகும். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் அநேக விஷயங்களை ஆடம்பரமாக அனுபவிக்க விரும்புவர், சுக்கிரனின் பலம் வருமானத்தை குறித்தாலும் சுக்கிரன் தேய்பிறை சந்திரன் மற்றும் ராகு/கேது போன்ற அசுப கிரஹங்களோடு தொடர்பு கொள்ளும்போது சம்மாதித்த பணம் அனைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்ய நேரும்.
அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் பிரபல கொடையாளர். பங்குகளின் எதிர்காலத்தை திறம்பட கணிப்பதில் வல்லவரான வாரன் பஃபெட், மிகவும் வெற்றிகரமான உலக முதலீட்டாளர்களில் ஒருவராகவும், தலைசிறந்த நிதி நிர்வாகியாகவும் கருதப்படுகிறார். 2008-ம் ஆண்டு உலகின் பணக்கார நபராக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றார். மேலும், 2012-ம் ஆண்டு உலகின் முக்கிய செல்வாக்கு மிகுந்தவராக டைம் பட்டியலில் இடம்பெற்றார். இவரைப்பற்றியும் இவரது முதலீட்டுக் கொள்கைகளைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
மிகவும் சிக்கனமானவரான வாரன் பஃபெடின் ஜாதகத்தில் காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிக ராசி லக்னமாகி அதுவே ராசியும் ஆகி சந்திரன் நீசமடைத்துள்ளது. அவரது ஜாதகத்தில் பணபர ஸ்தானங்களில் இரண்டாமிடத்தில் சனியும் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டதிபதியான குரு மற்றொரு பண பரஸ்தானமான எட்டில் புதனின் வீட்டில் நின்று இரண்டாம் வீட்டை பார்த்து, பதினோரம் வீட்டில் பன்னிரெண்டாம்வீட்டதிபதி நீசமடைத்து அவருக்கு வீடு கொடுத்த புதன் உச்சம் அடைந்து நீச பங்க ராஜ யோகம் பெற்று நின்றதோடு பத்திலே சூரியனும் ஆட்சி பெற சிறந்த முதலீட்டாளராகவும், அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் நிற்க செய்தது.
மேலும் சூரியனுக்கு இரண்டில் புதனும் சுக்கிரனும் நின்று சுப வெசி யோகத்தை பெற்று நிற்பதும் அவருடைய செல்வ செழிப்பிற்க்கு முக்கிய காரணமாயிற்று.
சிக்கனமும் சேமிப்பும் பெற தெய்வ வழிபாடுகள்:
சிக்கனம் மற்றும் சேமிப்பை ஒருவர் கடை பிடிக்க புதனின் அதிபதியான ஸ்ரீ விஷ்னு மற்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்குவது சிறந்த வழியாகும்.
மாலை வேளைகளில் கோதூளி லக்கின காலத்தில் வீட்டில் விளக்கேற்றி, ஸ்ரீ விஷ்னு சஹஸ்ரநாம ஸ்லோகம், ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ மஹாலஷ்மி அஷ்டகம் ஆகியவை பாரயணம் செய்வது வருமானத்தை பெருக்குவதோடு சிக்கனம் மற்றும் சேமிப்பையும் ஏற்படுத்தும்.