நவராத்திரி 2019: இன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்
நவராத்திரி பூஜை காலத்தின் நான்காம் நாள் இன்று அலை மகளான செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியை வழிபடக் கூடிய முதல் நாள் இந்த நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு.
சென்னை: மகாலட்சுமி என்றாலே தெரியும், செல்வங்களுக்கான தேவி. இவரை வழிபட்டு நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும் பெறலாம். அன்னை லட்சுமியை கொண்டாடும் இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான அந்த மகாலட்சுமியை வழிபடுவது பற்றியும் எப்படி இருந்தால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நமக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி வறுமையை போக்குபவள். குபேரனுடன் தொடர்பு கொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. மகாலட்சுமி அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போது வந்ததால், அவருக்கு அலை மகள் என்று பெயர் வந்தது. ஸ்ரீதேவியான மகாலட்சுமியை மகா விஷ்ணு தனது நெஞ்சில் சூடிக்கொண்டார். அவரிடம் வற்றாத செல்வம் குறைவில்லாது இருக்கிறது.
இன்றைய தினம் அன்னை மகாலட்சுமியை வணங்கி வரவேற்க கோலம் போட வேண்டும். அரிசியில் மஞ்சள் கலந்து அட்சதையால் கோலம் போட வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருள் கடாட்சம் கிடைக்கும். ஜாதிமல்லியால் அலங்கரிக்க வேண்டும். கதிர்பச்சை இதழால் அர்ச்சனை செய்ய வேண்டும். கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல் நைவேத்தியம் செய்ய வேண்டும். கொய்யா பழம் படையலுக்கு எற்றது. மகாலட்சுமி, விஷ்ணு பகவானின் போற்றிகளை பாடலாம். இன்றைய தினம் வழிபாட்டின் மூலம் கடன் தொல்லை தீரும். பணமாக பொருளாக நாம் வாங்கிய கடனை தீர்ப்பதோடு, முன்ஜென்ம கடன்களும் தீரும்.
செல்வத்திற்கு அதிபதி
அன்னை லட்சுமியை கொண்டாடும் இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான அந்த மகாலட்சுமியை பற்றியும் எப்படி இருந்தால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நமக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.
வாசல்படியில் அன்னை லட்சுமி
மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே,தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம்,மாலைகள்,வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள்.
திருமகளின் அருள்
லட்சுமிகள் எட்டு வகையாக அருள்பாலிக்கின்றனர். அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கின்றோம். அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைத்தால் செல்வம்,ஞானம், உணவு,மனவுறுதி, புகழ்,வீரம்,நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும்.
கனகதாரா ஸ்தோத்திரம்
அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது. ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம். தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் விளகேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.
அன்னையின் அருள்
மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி' என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது. இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை‘ஸ்ரீ பஞ்சமி'என்று அழைப்பார்கள்.அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்.
சந்தனமும் பன்னீரும்
சந்தனம்,பன்னீர் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும்.சந்தனம் திருமகளோடு அவதரித்து ஐந்து மரங்களில் ஒன்றாகும் அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால் லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம்.
லட்சுமி நிரந்தரமாக குடியேறுவாள்
குலத்தைக் காப்பது குல தெய்வங்களேயாகும்.ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வங்களை வழிபட வேண்டும். இதன்மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலோங்கும். பூஜிக்கத் தகுந்த மகா பாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப் பெண்மணிகள். இவர்கள் கிரக லட்சுமியாகத் திகழ்பவர்கள். இல்லப் பெண்மணிகளை தீயச் சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது.பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள்.
குங்கும பிரசாதம்
குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது.பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம்,நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றக்கூடாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து,குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.