புரட்டாசி பிரம்மோற்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி பிரம்மோற்சவம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை தல்லாகுளத்தில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருச்சி: தமிழகத்தில் உள்ள பிரபலமான பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் நடைபெற்றது. மதுரை தல்லாக்குளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
முசிறி அருகே உள்ள குணசீலத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் தங்கியிருந்து முறைப்படி விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பதிக்குச் சென்று தங்களது வேண்டுதல்களை செலுத்த முடியாத பக்தர்கள் அவற்றை இங்கு வந்து நிறைவேற்றி சுகம் பெறுகின்றனர். இதனால் தென்திருப்பதி என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.
தினசரியும் உற்சவ மூர்த்தி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தேரை பொக்லைன் எந்திரம், டிராக்டர் உதவியுடன் திருக்கோவில் பணியாளர்களே வடம் பிடித்து இழுத்தனர். 6.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
அக்டோபர் மாத ராசி பலன் 2020: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் அளித்து பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பக்தர்களும் தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலை கண்டறியப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்று இரவு 9 மணிக்கு பெருமாள் புஷ்பப் பல்லக்கில் சேவை சாதிக்கிறார். அதைத்தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதிக அளவில் பக்தர்கள் வருவதைத் தடுக்கும் பொருட்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கோவில் இணையதளத்தில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மதுரையில் கள்ளழகர் திருக்கோவிலுக்கு சொந்தமான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவம் இன்று தெப்ப உற்சவ நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது ஏராளமான பொதுமக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதே போல மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.