ராகு பெயர்ச்சி 2020: திருவாதிரையில் இருந்து இடம் மாறும் ராகு - கொரோனா அடங்குமா
ராகு பகவான் இன்று முதல் தனது சுய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து மிருகஷீரிடம் நட்சத்திரத்திற்கு இடம்மாறுகிறார். இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறையுமா? அதிகரிக்குமா என்று பார்க்கலாம்.
சென்னை: கெரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற கேள்வி எல்லோரின் முன்பும் எழுந்துள்ளது. மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் ராகுதான் இந்த நோய் பரவலுக்குக் காரணம் என்று ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரித்து வந்த ராகு இன்று முதல் மிருகஷீரிடம் நட்சத்திற்கு இடம் மாறுகிறார். ராகுவின் இடம்மாற்றம் கொரோனா வைரஸ் நோய் பரவலை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள். மனித தலையும் பாம்பு உடலோடும் இருக்கும் ராகுவும், பாம்பு தலை மனித உடலோடு இருக்கும் கேதுவும் நவகிரகங்களில் இடம்பெற்றது ஒரு புராண கதை. அந்த கதைக்குள் நாம் போக வேண்டாம். ராகு கேது ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்குகின்றன. 18 மாதங்களில் ஒரு நட்சத்திர பாதத்தை 2 மாதங்கள் கடக்கின்றன. 9 பாதங்களை கடக்க 18 மாதங்கள் பிடிக்கின்றன.
கொரோனா டிஸ்சார்ஜ் விதிகளை திடீரென மாற்றிய தமிழக அரசு.. இனிமேல் இதுதான் வழி.. சுகாதாரத்துறை அதிரடி!
ராகு கேது கிரகங்களுக்கு சொந்த வீடு ஆட்சி வீடு கிடையாது. எந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ, அந்த வீட்டின் பலனை தருவார்கள். சுப கிரகத்தின் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுப பலனையும், அசுப கிரகங்களின் வீட்டில் சஞ்சரிக்கும் போது அசுப பலனையும் தருகின்றன.
ராகுவின் பயணம்
வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி மிதுனம் ராசியிலும், கேது பகவான் தனுசு ராசியிலும் பெயர்ச்சி அடைந்தார். திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி மார்ச் 7ஆம் தேதி நிகழ்ந்தது. புனர்பூசம் 3ஆம் பாதத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி திருவாதிரையில் பயணத்தை தொடங்கினார் ராகு. திருவாதிரை நட்சத்திரத்தில் நான்கு பாதங்களை கடந்து இப்போது மிருகஷீரிட நட்சத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.
பரவிய வைரஸ்
திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம். ராகு பகவான் திருவாதிரையில் இருந்த போது கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்து விட்டது. சீனாவில் தொடங்கிய வைரஸ் பயணம், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளை கபளீகரம் செய்து இந்தியாவிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
செவ்வாய் நட்சத்திரத்தில் ராகு
ஒருவழியாக தனது சொந்த நட்சத்திரத்தில் பயணம் செய்த ராகு இனி மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பயணிப்பார். இது செவ்வாயின் நட்சத்திரம். மிதுனம் ராசியில் இருந்து படிப்படியாக நகர்ந்து ரிஷபம் ராசிக்கு செப்டம்பர் மாதம் பெயர்ச்சியாகி விடுவார். வைரஸ் தொற்று நோய் படிப்படியாக செயல் இழக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் உலகத்தையே முடக்கிப் போட்டது. இனி படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் என்று ஜோதிட கணிதம் மூலம் நம்பிக்கை கீற்று உதயமாகியுள்ளது.
அமெரிக்கா தீவிரவாத தாக்குதல்
18 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மிதுனம் ராசியில் திருவாதிரை நட்சத்தில் ராகு சஞ்சரித்த போது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவில் நடைபெற்றது. 2001 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி கிரக நிலைகளை பார்த்தால் ரிஷபம் ராசியில் சனி, மிதுனம் ராசியில் சந்திரன், குரு, ராகு, தனுசு ராசியில் செவ்வாய் கேது என கிரகங்கள் சம சப்தமமாக பார்க்கின்றன.
கொரோனா பேரழிவு
அந்த நேரத்தில் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த தாக்குதல் அமெரிக்க பொருளாதாரத்தை அசைத்து பார்த்தது. சரியாக 18 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிரங்களின் சஞ்சாரமும் பார்வையும் உலக மக்களை கொரோனா வைரஸ் மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தனுசு ராசியில் செவ்வாய், குரு கேது, மிதுனம் ராசியில் ராகு சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவானின் பார்வை திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரித்த ராகுவின் மீது விழுந்ததால் நோய் அதிகம் பரவியது.
நோய் பாதிப்பு குறையுமா
நோய் பரவலை தடுக்க ஊரடங்கினால் மக்கள் வீடுகளுக்கு முடங்கியிருந்தனர். 60 நாட்களுக்கு மேலாக வீட்டிற்குள் முடங்கியிருந்த பலரும் தற்போது படிப்படியாக தங்களின் பணிகளை பார்க்க தொடங்கியிருந்தனர். ஊரு விட்டு ஊரு சென்றவர்கள் தங்களின் வேலைகளை பார்க்க மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர். 2020ஆம் ஆண்டு எண் 4 இது ராகுவின் ஆண்டு. ராகுவின் ஆட்டமும் அதிகமாகவே இருந்தது. இனி ராகுவின் பயணம் மிருகஷீரிடத்திற்கு இடம் மாறுவதால் நோய் தாக்கம் படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டாலும் ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ உள்ள நிலையில் அதுவரைக்கும் நோய் தீவிரம் மக்களை ஒருவித ஊசலாட்ட மனநிலையிலேயே வைத்திருக்கும் என்றே தெரிகிறது.