Ramadan 2020: இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு காலம் எப்போது தொடங்குது தெரியுமா
புனித ரமலான் மாதம் தொடங்கப்போகிறது. சூரிய உதயத்திற்கு முன்பிருந்தே பசியோடு இறைவனை நினைத்து உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு இருந்து சூரிய அஸ்தமனம் ஆன பின்னர் நோன்பு முடிக்கின்றனர். ஒரு நாள்
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். இஸ்லாமியர்களின் காலண்டரின் ஒன்பதாவது மாதம் புனித ரமலான் மாதம். நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகின்றனர். அமாவாசை முடிந்து பிறை தெரியும் நாளில் இருந்து மாதம் தொடங்கும். இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 23ஆம் தேதிவரை நோன்பு கடைபிடிக்கின்றனர்.
இறைவனை நினைத்து விரதம் இருப்பதும் நோன்பு இருப்பதும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. இந்துக்கள் தங்கள் பண்டிகை நாட்களிலும், வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி நாட்களிலும் உண்ணா நோன்பு இருக்கின்றனர். அதே போல கிறிஸ்துவ மக்கள் புனித வெள்ளி பண்டிகையை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலத்தில் விரதம் இருக்கின்றனர். அதே போல இஸ்லாமிய பெருமக்கள் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஐந்து பெரும் கடமைகள்
இஸ்லாம் என்னும் மார்க்கம் தனது சகாக்களுக்கு ஐந்து பெரும் கடமைகளை போதிக்கிறது. அவை முறையே கலிமா எனப்படும் இறை நம்பிக்கை தொழுகை எனப்படும் இறை வழிபாடு, ஜாகத் எனப்படும் தான தர்மங்கள் செய்தல், ரமலான் நோன்பு மற்றும் ஹஜ் எனப்படும் புனித பயணம் மேற்கொள்ளுதல்.
புனித ரமலான் மாதம்
இஸ்லாமிய மாதங்களை விட இந்த ரமலான் மாதம் சிறப்பு பெற்ற இறைஅருள் பெற்ற மாதமாக கருதப்படுகிறது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனிடம் நெருங்கி செல்கிறான்.
இறைவனுக்காக பசியோடு இரு
கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதன் மூலம் இறைவனுக்கு பிடித்தவர்களாகின்றோம். பகல் முழுவதும் பசித்து இருப்பதும், இரவு முழுவதும் இறைவனை வணங்கி இருப்பதும் நோன்பின் சிறப்பு.
விடிகாலையில் தொடங்கும் நோன்பு
பசியோடும் தாகத்தோடும் இறை நம்பிக்கையோடு நோன்பு இருப்பது ஒரு தவம். பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் மனிதன் சுய ஒழுக்கத்தையம் சுய தன் அடக்கத்தையும் பெறுகிறான். புனித ரமலான் மாதத்தில் விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு திறப்பதற்கு இப்தார் என பெயர்.
நோன்பு திறப்பு
இப்தார் திறப்பின் போது பள்ளிவாசல்களில் தரப்படும் நோன்பு கஞ்சி மற்றும் பேரிட்சம் பழங்கள் கொண்டு நோன்பை நிறைவு செய்கிறார்கள். நோன்பு நிறைவு செய்வதற்கு முந்தைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இறைவன் வாக்குறுதி அளிக்கிறார். அதன் பொருட்டு இஸ்லாமிய மக்கள் இறைவனுக்காக நோன்பு இருக்கின்றனர்.
ஆன்மீக பயிற்சி
நோன்பு பாவங்களில் இருந்து மனிதர்களை விடுவிக்கிறது. நோன்பு இருப்பவர்கள் தீய வார்த்தைகளை பேசுவதில்லை. யாருடனும் சண்டை போடுவதில்லை. கோடை காலமோ, குளிர் காலமோ உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் இந்த புனித மாதத்தில் நோன்பு இருக்கின்றனர். இதை ஒரு ஆன்மீக பயிற்சியாகவே கடைபிடிக்கின்றனர். நோன்பு இருப்பதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோன்பு இருப்பதில் விலக்கு
வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் நோன்பு இருக்க வேண்டியதில்லை என இஸ்லாம் மதம் விலக்கு அளித்துள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவாகும் தொகையை தர்மமாக தரலாம்.
ரமலான் மாதத்தின் போது, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து தங்களின் முக்கிய கடமையை நிறைவேற்றுகின்றனர். புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து இறுதி நாளில் பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர். நிலவு நாள்காட்டியின் பத்தாவது மாதமான ஷாவ்வாலின் முதல் நாள் ஈத் பண்டிகை வருகிறது.