ரம்ஜான் நோன்பு காலத்தின் ஸஹர் இப்தார் நேரங்கள் - ஈகையின் பெருமையை கூறும் திருநாள்
பசியோடு இருப்பவர்களுக்கும், இல்லாத ஏழைகளுக்கும் தானம் கொடுப்பதன் மூலம் இறைவனின் அருளை நேரடியாகவே பெறலாம் என்பதை உணர்த்துகிறது ரம்ஜான் நோன்பு. 30 நாட்களும் நோன்பிருந்து பசி, தாக்கத்தின் அருமையை உணரவைப்
சென்னை: சுயநலமற்று வாழ வேண்டும் பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து உண்ண வேண்டும் என்பதை உணர்த்துவதான் ரம்ஜான் நோன்பின் தத்துவம். புனித மாதமான ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் 9வமு மாதம். இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து இறை தரிசனம் கண்டு ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு தொடங்கும் முன்பாக உணவு உண்ணும் நேரம் ஸஹர் என்றும் நோன்பு முடிந்து சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறப்பதற்கு இப்தார் என்றும் கூறுகின்றனர். தினசரியும் ஸஹர் நேரமும் இப்தார் நேரமும் இஸ்லாமிய காலண்டரில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஸஹர் நேரம் அதிகாலை 4.56 மணி இப்தார் நேரம் மாலை 6.33 மணியாகும்.
Recommended Video
உணவின் அருமை மூன்று நேரமும் சாப்பிடுபவருக்கு தெரியாது தண்ணீரின் அருமை தாகத்தோடு இருப்பவர்களுக்குத்தான் தெரியும். நோன்பிருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் பசியோடும் தாகத்தோடும் இறைவனின் நினைவாக இருப்பதோடு இயலாதவர்கள் ஏழைகளுக்கு தானம் கொடுத்து அவர்களின் திருப்தியில் வாழ்த்தில் இறைவனை காண்கின்றனர்.
இந்த மாதத்தில் எந்த தீய பழக்கங்களையும் வைத்துக்கொள்வதில்லை. புகைப்பதில்லை, மது குடிப்பதில்லை, கோபப்பட்டு சண்டை போடுவதில்லை. இறைவனைப் பற்றிய நினைவுதான் நோன்பிருக்கும் அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் யாரும் வீண் வம்பு பேச்சுக்கள் பேசுவதில்லை.
இந்த நோன்பு நேரத்தில் நாவடக்கத்துடன் இருந்தாலே நமது சக்தி சேமிக்கப்படும் என்பதை கற்றுத் தருகிறது இஸ்லாம்.
தானம் கொடுப்பதை ஈகை திருநாளாக கொண்டாடும் பண்டிகைதான் ரம்ஜான். ஆண்டு முழுவதும் கண்டதையும் சாப்பிட்டு வெந்து வேகாததை தின்று வேலைக்கு ஒடி இரவில் வீடு திரும்பி சாப்பிட்டு படுத்து பழகிவிட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமாதம் இதுபோல விரதம் இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது.
இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருப்பதையும் மவுன விரதம் இருப்பதையும் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. இந்துக்கள் சஷ்டி, ஏகாதசி, திருவாதிரை, சிவராத்திரி என எத்தனையோ பண்டிகை நாட்களில் உண்ணா விரதம் இருந்து இறைவனை வழிபடுகின்றனர். அது ஒருநாள் நோன்புடன் முடிந்து விடும். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு காலம் ஒரு மாதம் நீடிக்கும்.
நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். ஸகர் உணவு உடலை புத்துணர்ச்சியாக்கும். நுரையீரல் புத்துணர்ச்சியடையும் என்கின்றனர் இஸ்லாமிய பெருமக்கள். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. 'பஜ்ர் எனும் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!' (அல்குர்ஆன் 2:187) என்ற திருக்குர்ஆன் வசனத்தின் பொருளானது, இரவின் கருமையும் விடியலின் வெண்மையும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூற்கள்: புகாரி 1916, நஸயீ 2171)
பஜ்ருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்பது நல்லது. ஸஹர் நேரத்துக்கு எழுந்து உண்ணாமல், வழக்கமான இரவு உணவு வேளையில் சாப்பிட்டு விட்டுத் தூங்கிவிடும் பழக்கத்தை உடையவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து ஒரு பேரீட்சம் பழம், தண்ணீர், பால் போன்ற எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பின் ஆரம்ப நேரம் பஜ்ர் என்பதால் அந்த நேரத்தை அடையும் வரை ஸஹர் செய்யலாம். அந்த நேரத்திற்கும் சுப்ஹுதொழுகைக்கும் இடையே குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஓதும் கால அளவு என்பதையும் இரண்டாம் ஹதீஸ் விளக்குகிறது. ஐம்பது வசனங்களை ஓதுவதற்கு சுமார் பத்து நிமிடங்களாவது ஆகும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்றைய அரேபியர்களின் உணவு பேரீத்தம் பழங்களும் ஸவீக் எனும் கோதுமைக் கஞ்சியும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. இந்த உணவை உண்பதற்கு பத்து நிமிடங்கள் என்பது அதிகமேயாகும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச் செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழப்பதோடு சில வேளை பஜ்ர் தொழுகையையும் இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
காலை முதல் நோன்பிருந்து சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பது இப்தார் ஆகும். சூரியன் மறைந்த உடன் தாமதப்படுத்தாது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது, இல்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகும். "உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.