ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா - ராவண சம்ஹாரம் ரத்து
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஒரு நாள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேகம் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தல வரலாற்றை விளக்கும் திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடி, 24 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாதசுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் திதி கொடுக்கவும் பித்ரு கடன் தீர்க்கவும் ஏராளமானோர் ராமேஸ்வரம் செல்வதுண்டு.
வைகாசி விசாகம் விரதம் - முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்
ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம்
இராமாயணத்தில் சீதையை இலங்கைங்கு கவர்ந்து சென்ற ராவணனை போரில் வதம் செய்தார் ஸ்ரீராமர். அவரை பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை செய்ய நினைத்தார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வர வடக்கே அனுமனை அனுப்பினார். அனுமன் வர தாமதமாகவே கடற்கரை மணலில் லிங்கம் செய்தார் சீதை. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து சீதை, ராமர், லட்சுமணர் வழிபட்டனர்.
அனுமர் கொண்டு வந்த லிங்கம்
சிவலிங்கத்தை தாமதமாக கொண்டு வந்த ஆஞ்சநேயர், கோபப்பட்டு மணல் லிங்கத்தை வாலினால் தகர்த்தார் அது முடியவில்லை. உடனே அனுமரை சமாதானப்படுத்திய ராமர், தனக்காக அனுமர் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படியே தற்போதும் பூஜைகள் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம் கோவில்
சீதாதேவி ராமலிங்க பிரதிஷ்டை செய்த தினத்தை ஆண்டு தோறும் விழாவாக எடுப்பது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளில் முதல் நாளில் கோவிலில் இருந்து ராமபிரான், சீதா, லட்சுமணர் ஆகியோருடன் தங்க கேடயத்தில் திட்டக்குடி துர்க்கை அம்மன் கோவில் அருகே எழுந்தருளி ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
ராவணன் தம்பிக்கு பட்டாபிஷேகம்
2வது நாளன்று ராமேசுவரம் கோவிலில் இருந்து ராமபிரான், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் எழுந்தருளி இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபீஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
ராமலிங்கர் பிரதிஷ்டை
மூன்றாவது நாளன்று ராமேஸ்வரம் கோவிலின் விசுவநாதர் சன்னதியில் இருந்து அர்ச்சகர் ஒருவர் சிவலிங்கத்தை சுமந்தபடி முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.
ஒருநாள் திருவிழா
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதால் மதுரையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் கோவிலுக்குள் நடைபெற்றன. அதே போல ராமேஸ்வரத்தில் ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை மட்டும் கோவிலுக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.