ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் 3ஆம் நாளன்று நம்பெருமாள் அலங்காரமாக அர்ஜூனா மண்டபத்தில் சேவை சாதித்தார்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து திருவிழா 3ஆம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. நம்பெருமாள் அலங்காரத்தில் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அரையர் சேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம். செய்தனர்.
21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாள் சனிக்கிழமை தொடங்கியது.
இரண்டாம் நாளான நேற்று சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம்,வைரகாதுகாப்பு,தங்க கிளி,நெல்லிக்காய் மாலை,பவள மாலை,தங்க பஞ்ஜாயுத மாலை,பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் தங்கபல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
ராஜஸ்தானில் ஷாக்! திருமண விழாவில் பங்கேற்ற ஓமிக்ரான் நோயாளிகள்.. பலருக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு
அருள்பாலித்த நம்பெருமாள்
பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் திருநாள் காலையில் நம்பெருமாள் சவுரிக் கொண்டை,பனிக்குல்லாவில் புஜகீர்த்தி,சந்திர வில்லை சாற்றிக் கொண்டு,மார்பில் தாயார் பதங்கங்கள்,அழகிய மணவாளன் பதக்கம்,மகரி,கல் இழைத்த ஒட்டியாணம்,வைர அபய ஹஸ்தம்,அடுக்கு பதக்கங்களுடன் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதிக்தார்
பக்தர்கள் தரிசனம்
அதனைத் தொடர்ந்து அரையர் சேவை எனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர் பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார். பூலோக வைகுண்டப் பெருமாளை ரங்கா, ரங்கா ரங்கா என பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அலங்காரம்
வைணவ கோவில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாடுகளில் ஒன்று அரையர் சேவையாகும். திருக்கோவில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்ச கச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும், இறைவனுக்கு சாத்தப்பட்ட மாலையோடு வழக்கமான வைணவ சின்னங்களையும் அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட்டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். இத்தகு அரிய கலை வைணவ கோவில்களில் மட்டுமே காணப்படும்.
பக்தி சேவை
நாலாயிர திவ்யப்பிரபந்தத்தத்தை ஆடல் பாடலுடன் பாடி இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் அரையர்கள். அரையர் என்பவர் கோவில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப் பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை
திராவிட வேதம் தொகுத்த நாதமுனிகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் இச்சேவை ஸ்ரீரங்கத்தில் தொடங்கப்பட்டது. நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கினார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு.
அபிநயத்தோடு பாடல்
குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு. உற்சவர் முன்பு நிகழ்த்தப்படும் இச்சேவையானது மூன்று பகுதிகளைக் கொண்டது. பிரபந்தத்தின் குறிப்பிட்ட பாடலை பாடுவது முதலாவதாகவும், பாடப் பெற்ற பிரபந்தத்தின் பொருளுக்கு ஏற்றாற்போல் அபிநயம் பிடித்து ஆடுவது இரண்டாவதாகவும், பாடலின் உட்பொருளை விளக்கிக் கூறுவது மூன்றாம் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சேவை. இது கதையைத் தழுவி அமையாமல் ஒரு பாடலுக்கான பொருள் விளக்கம் தரும் நிலையில் அமைகிறது.
டிசம்பர் 14ல் சொர்க்கவாசல் திறப்பு
தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய அம்சமான சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 14ஆம்தேதி அதிகாலை நடைபெறுகிறது.