ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவம் தீர்த்தவாரி : நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடைந்துள்ளது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்துள்ளது. ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். துலாம் மாதமான ஐப்பசி மாதம் பிறந்த உடனேயே அம்மா மண்டபத்தில் இருந்து தங்கக்குடத்தில் காவிரி நீர் எடுத்து கொண்டு போய் நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நேற்று 11ஆம் தேதி வரை நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடி மரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தனத்திரயோதசி நாளில் லட்சுமி பூஜை செய்வதால் ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும்
உற்சவத்தின் 7ஆம் நாளான்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.
அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் காலை தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் சாளக்கிரம மாலை அணிந்து சேவை சாதித்தார். தீர்த்தவாரியுடன் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவ சேவை நிறைவடைந்தது. அடுத்ததாக வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்.