தைப்பூசம் தெப்பத்திருவிழா - திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சாமி புறப்பாட்டில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தெப்ப திருவிழாவையொட்டி இன்று முதல் 24ஆம் தேதி வரை காலை, மாலையிலும் கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் மற்றும் தைப்பூச தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழாவானது, தை மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தை 10ஆம் தேதி தை கார்த்திகை திருவிழா நடைபெறும். 15ஆம் தேதி தைப்பூச திருவிழாவுடன் முடிவடைகிறது.
தைப்பூச திருவிழாவானது 10 நாட்களாக விமர்சியாக நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதனாலும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, திருவிழா அனைத்தும் உள்கோவில் திருவிழாவாக கோவில் வளாகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமி புறப்பாட்டில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் கோவிலுக்குள் கருவறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.