சூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா
சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் பல கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநள்ளாறு: கங்கண சூரிய கிரகணம், சூடாமணி சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழும் இந்த நாளில் நாம் பிறருக்கு செய்யும் தான தர்மங்களினால் நூறு மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
Recommended Video
சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார்.
பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.
தந்தையர் தினம் 2020 : ஒவ்வொரு அப்பாக்களுக்கும் இதுபோல ஒரு கதை உண்டு!
சனி நட்சத்திரங்கள்
சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம். சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.
சனியின் கட்டுப்பாடூ
சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார். சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
சனி திசை 19 வருடங்களாகும். ஒருவரின் ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது 19 ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் ஒருவரை வைத்திருப்பார்.
சனி பகவானின் அருள்
சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.
சனியால் ஏற்படும் சந்தோசம்
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. எனவேதான் சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
கொரோனா லாக் டவுன்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்படி திருநள்ளாறு சனிபகவான் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தினமும் வழக்கமாக பூஜைகள் நடந்தன. இந்தநிலையில் 5ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கட்டுப்பாடுகளால் பக்தர்கள் குறைவு
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக சனிக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால் தற்போது பல கட்டுப்பாடுகள் உள்ளதாலும் இ பாஸ் பெற வேண்டிய நிபந்தனை உள்ளதாலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது.
சனிபகவான் கோவிலில் பூஜை
சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜைகளுக்குப் பின்னரே சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதே நேரத்தில் சூரிய கிரகண நேரத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இன்றைய தினம் சூரிய கிரகண பூஜைகளும் செய்யப்படுகின்றன.
தர்ப்பை புல் ஸ்தல விருட்சம்
கிரகணம் நிகழும் போது வீடுகளில் தர்ப்பை புல்லை பயன்படுத்துவார்கள். தர்ப்பை மகிமை வாய்ந்தது. திருநள்ளாறு ஸ்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர். அங்கு தல விருட்சமே தர்ப்பை புல்தான் எனவே கிரகண தோஷங்கள், எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது என்பதால்தான் இந்த கோவில் நடை அடைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பாரண்யேஸ்வரர் சிறப்பு
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலின் நிலைப்பாடு குறித்து திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலின் தலைமை அர்ச்சகருமான ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தெரிவிக்கையில் இன்று விஷேசமான கிரகணம் ஆகும் என்றும் பொதுவாக எந்தவொரு கிரகண நாளிலும் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் நடை மூடப்படுவதில்லை. இக்கோயிலில் உள்ள சனீஸ்வரபகவான் அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மூலவரான தர்பாரண்யேசுவரர் கிரகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
கிரகண புண்ணியகால பூஜை
கிரகண நேரத்தில் சுவாமிகளை வழிபாடு செய்யும்போது, குறிப்பாக ஜபங்கள் அனைத்தும் பன்மடங்கு பலனைத் தரும். கிரகண நேரம் என்பது புண்ணிய காலமாகும். இந்த நேரத்தில் திருநள்ளாறு கோயிலில் உள்ள தர்பாரண்யேசுவரர், தியாகராஜர், பிரணாம்பிகை, சனீஸ்வரர் ஊள்ளிட்டோரை வழிபடுவது பெரும்பயனையே தரும் பாவங்களை போக்கிக்கொள்ளும் உரிய நாள் இன்று கோயில் நடை வழக்கமான நேரத்தில் திறக்கப்பட்டிருக்கும் என்றும் பிற்பகல் கிரகணம் முடிந்தவுடன் சனீஸ்வரருக்கு கிரகண புன்னிய பூஜையும் அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜை உள்ளிட்டவை நடத்தப்படும் என்றும் கொரோனா நோயால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் இந்த சூரியகிரகணம் பலனைத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கிரகணம் முடியும் நேரத்தில் சனீஸ்வரருக்கு கிரகண புண்ணியகால பூஜை நடைபெறுகின்றது.