தூத்துக்குடி பனிமய மாதா பேராலய பெருவிழா: தங்கதேர் பவனி ரத்து - நேரலையில் விழாவை காண வேண்டுகோள்
தூத்துக்குடி துாய பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தூய பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.
பெகாசஸ் ஒட்டு கேட்பு- விசாரிக்க உத்தரவிட கோரும் 9 மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவர்தான் என்று கூறப்படுகிறது.
பனிமயமாதா
மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார் பனிமய மாதா. இந்த ஆலயத்திற்கு தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். போன்றவர்கள் வருகை தந்து பெருமை சேர்த்துள்ளனர். கி.பி. 1582ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713ஆம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நானூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம்.
மக்களுக்கு ஆசி
சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் ஏசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பேராலய திருவிழா
இங்கு ஆண்டு தோறும் இங்கு ஜூலை இறுதியில் திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பனிமயமாதா அன்னையை வழிபடுவார்கள்.
தங்க தேரோட்டம்
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் ஏசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.
கொரோனா பரவல்
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி பனிமய மாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், தூத்துக்குடி துாய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் இன்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்லைனில் தரிசனம்
பனிமயமாதா கோவிலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது எனவும், கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழச்சிகளும் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூடியூப் சேனல்கள் மூலமும் ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தத்தம் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டுகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு மக்கள்
பனிமயமாதா ஆலய திருவிழா பத்து நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்டு தோறும் பனிமயமாதா திருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
அமைதியான முறையில் திருவிழா
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளான இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் 7ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. பேராலயம் சுற்றிலும் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.