திருச்சானூர் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் - அலங்கார ரூபினியாய் எழுந்தருளிய பத்மாவதி தயார்
திருச்சானூர் பத்மாவதி தயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார்.
திருச்சானூர்: பத்மாவதி தாயார் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. கஜவாகனத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.
மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.
பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கருவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார்.
பத்மாவதி தாயார்
கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
அலர்மேல்மங்கைத்தாயார்
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல் மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.
கார்த்திகை பிரம்மோற்சவம்
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், கொரோனா பரவல் தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாயார் வாகன சேவை
கோயிலுக்குள் தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது. சேஷவாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், கஜ வாகனம் என தினசரியும் தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சீனிவாச பெருமாளுக்கு கருட வாகன சேவை எப்படி விஷேசமானதோ அதே போல பத்மாவதி தாயாருக்கு கஜ வாகன சேவை சிறப்பானது.
கஜ வாகனம்
முக்கிய வாகன சேவையான கஜ வாகனத்தில் இரவு தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்தார். இதையொட்டி, ஏழுமலையான் கோயில் இருந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் லட்சுமி காசுமாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பஞ்சமி தீர்த்தம்
கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது.