திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. சனிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 11ஆம் திருநாளான்று தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 23ஆம் தேதியன்று ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார்.
அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் 8ஆம் திருநாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.
அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தேரரோட்டத்தில் பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி, வெளி வீதி நான்கிலும் பவனி வருவார். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு பெரிய தேர் இரண்டும் ஓடவில்லை.
இதனால் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன், தெய்வானை அம்மன் தனித்தனி மூன்று சிறிய தேர்களில் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். சனிக்கிழமையன்று 11ஆம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.