திருச்செந்தூர் சூரசம்ஹாரமும் கந்த சஷ்டி புராண கதையும்
மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. மாமரத்தின் வடிவில் சூரன் நின்றதால் திருச்செந்தூர் பகுதிகளில் மாமரம்
தூத்துக்குடி: மாமரத்தின் வடிவில் நின்ற சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தில் இது நிகழ்ந்தது. மாமரத்தின் வடிவில் சூரன் மாறி முருகனால் சம்ஹாரம் செய்யப்பட்டதால் திருச்செந்தூர் பகுதிகளில் இன்றும் மாமரம் வளர்வதில்லை. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று.
சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
முருகப்பெருமான் தன் தாய் பார்வதியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமர வடிவில் இருந்த அசுரன் மீது விட அந்த வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.
நோய் தீர்த்த முருகன்
ஆதிசங்கரர் வட மாநிலத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கியது. இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரின் சிலை உள்ளது.
சூரனை ஆட்கொண்ட முருகன்
சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும் பரமகாருண்ய மூர்த்தியான அவர் சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார்.
சஷ்டி திதியில் சூரசம்ஹாரம்
சூரனுக்கு மீண்டும் ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி முருகனிடம் இருந்து தப்ப முயன்றான். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது.
ஆறுநாட்கள் சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம் ஆறுநாட்கள் விரதமிருக்க முடியாதவர்கள், ஆறாம் நாளன்று மட்டுமாவது விரதமிருந்து கந்தனை வணங்கி அடியார்களுக்கு உணவளித்துப் பின் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுவது நல்லது. ராட்சச குணங்களை தூண்டக்கூடிய மசாலாப் பொருட்கள், பூண்டு, வெங்காயம் போன்றவைகளை விரத நாட்களில் தவிர்த்து சாத்வீக குணத்தைத் தரக்கூடிய வகையில் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதன்படி விரதங்களை கடைப்பிடிக்கலாம்.