திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜன.22ல் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று காலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 22ஆம் தேதியும் , 28ஆம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.
தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவிலும் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் தைபூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் .
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனையும் , சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் . விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 22ஆம் தேதி 4ஆம் திருநாள் அன்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும் , 28ஆம் தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்றுச் சிறப்பு மிக்க கைலாசபுரம் தீர்த்தவாரி மண்டபத்தில் சிறப்பாக நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி கோவில் சவுந்தர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி முனி சிரேஷ்ட்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் திருநடனக்காட்சியும் , 30ஆம் தேதி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரன் என்கிற வெளித் தெப்பத்தில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடக்கிறது. இன்று காலை நடந்த கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லுக்கு வேலியிட்ட புராண கதை
திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சிக்கு புராண வரலாறு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் பட்டர்கள் வீடு, வீடாகச் சென்று நெல் யாசகமாக பெற்றனர். அந்த நெல்லை, நெல்லையப்பர் கோவில் முன்பு காய வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென்று பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
இதனால் பட்டர்கள் அச்சமடைந்தனர். தாங்கள் காயவைத்த நெல் மழையில் நனைந்து தங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய்விடுமோ என்ற மனவேதனையுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
தங்கள் காயவைத்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அதை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக புராண வரலாறுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவுபடுத்தும் பகுதியில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெறுகிறது.