சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் புதிய ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாகச்சாலை பூஜை நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, காலை, 6.45 மணிக்கு மேல் தொடங்கி 7.25 மணிக்குள், ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளட்ட பலர் பங்கேற்றனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உறையூர் வெக்காளியம்மன்
திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் அம்மன் கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து மக்களை காத்து வருகிறார். இந்தநிலையில் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்தமண்டபம், அர்த்தமண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளி தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்று வந்தன.
இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்றைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1ஆம் தேதியன்று காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வெக்காளியம்மனிடம் அனுமதி பெறப்பட்டது.
காலை 9.30 மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்துஹோமம், மாலை 5.30 மணிக்கு பிரவேசபலி, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் காலை 8 மணிக்கு நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, யாகசாலை நிர்மானம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, ரக்ஷாபந்தனம் நடத்தப்பட்டு மாலை 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம் செய்யப்பட்டு கலாகர்ஷணமும், யாகசாலை பிரவேசம், யாகமண்டப வேதிகை பூஜை, அக்னிகார்யம் நவாக்னியாகங்கள் நடத்தப்பட்டன.
இன்று அதிகாலை 4 மணிக்கு 8ஆம் கால யாகபூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்று காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது.
பின்னர் காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்தி விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன், மூலவ மூர்த்திகளின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.