திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி : வெளியூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரை அனுமதி கிடையாது என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படாது என்றும் உள்ளூர் பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டை காண்பித்து தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவில்களில் பகல் பத்து விழா நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 25ம்தேதி முதல் ஜனவரி 3ம்தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி முதல்முறையாக 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஏற்கனவே ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். உள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 இடங்களில் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
இங்கு திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். வரும் 24ம் தேதி முதல் 3ம் தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படாது. உள்ளூர் பொதுமக்கள் தங்களின் ஆதார் கார்டை காண்பித்து தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு 25ம்தேதி அதிகாலை 3 மணிக்கு வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வரிசையில் அனுமதிக்கப்பட உள்ளனர். முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் அவர்களுடன் 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரை அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீர ஜெயமங்கள சனீஸ்வரரை வேண்டுவோம்
வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் வலம் வருவார். மறுநாள் துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, பக்தர்கள் இன்றி கோயிலுக்குள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியொட்டி அன்ன பிரசாத கூடத்தில் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னப்பிரசாதம் வழங்கப்படும். அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.