காதலர் தினம்: காதலில் வெற்றி பெறும் ஜாதக அமைப்பு யாருக்கு இருக்கு?
ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணி, கிரகங்களின் சேர்க்கை, பார்வை போன்றவைகளைப் பார்த்து யாருக்கு காதல் திருமணம் அமையும் என்று பார்க்கலாம்.
மதுரை: எல்லோருக்கும் காதல் வாய்ப்பதில்லை. அப்படியே காதலித்தாலும் அந்த காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவதில்லை. ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமர்வும், கூட்டணியும் ஒருவருக்கு காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.
யாருடைய ஜாதகத்தில் காதல் திருமணம் செய்யும் யோகம் அமையும் என்று பார்க்கலாம். யாருடைய காதல் வெற்றி பெறும் என்று பார்க்கலாம்.
காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பார்க்க ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம் பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவகத்தை வைத்து முடிவு செய்யலாம்.
திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம்.
காதல் கிரகங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவம், அல்லது ஐந்து ஏழு வீடுகள் தொடர்பு இருந்தால் காதலிப்பார்கள். அதே போல லக்கினம் களத்திர பாவம், அல்லது லக்கினம் ஐந்தாம் இடம் ஏழாம் பாவகம் தொடர்பு இருந்தால் காதல் திருமணம் நிச்சயம் நடைபெறும். காதல் கிரகங்கள் நான்காம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் கல்லூரியிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்திலும் காதல் மணியடிக்கும்.
காதலும் கற்பும்
ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும்.
யாருக்கு காதல் வரும்
ஓருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலே காதல் திருமணம் நடைபெறும்.
இல்லற வாழ்க்கை
செவ்வாய் லக்னத்துக்கு 1,2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து திருமணம் முடித்து வைத்தனர்.
சபல புத்தி ஆண்கள்
ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான சூழல் உள்ளது. ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும்.
புகழ்ச்சிக்கு மயங்கும் காதலன்
சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும்.
மதம் மாறி திருமணம்
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலே குரு பாதிக்கப்பட்டிருந்தாலோ கலப்புத்திருமணத்தில் முடியும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது, இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.
காதலில் பிரிவு
ஐந்து ஏழாம் வீடுகளில் சுக்கிரன் சனி செவ்வாய் இணைந்திருப்பதும் சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்படுவதும் காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பாகும். ஜாதகத்தில் ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.