பிரியாவின் முகக்கவசம்.. கோவிட் பயத்தை போக்கும் காமிக் புக்!. தமிழ், கன்னடம், மலையாளத்தில் ரிலீஸ்!
சென்னை: இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரபலமான சித்திரக் கதை புத்தகம் "பிரியாவின் முகக்கவசம்" தமிழ், கன்னடம், மற்றும் மலையாள ஆன்லைன் பதிப்பை, தென்னிந்திய சமூக ஊடகப் பிரபலங்களின் ஆதரவுடன், சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அறிமுகம் செய்தது.
"பிரியாவின் முகக்கவசம்" என்பது இந்தியாவின் முதல் பெண் சித்திரக் கதை புத்தக சூப்பர் ஹீரோவைக் கொண்ட தொடரின் புதிய பதிப்பாகும். இந்த சித்திரக் கதை புத்தகத்தில் வரும் சூப்பர் ஹீரோ பிரியா, உலகம் முழுவதுமுள்ள சிறுமிகளின் வலிமையின் அடையாளமாகவும், மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாகவும் காட்டப்படுகிறாள்.
தற்போது உலகின் சுகாதாரத்துக்கும், நலனுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட்-19 நோய்த்தொற்றின் மீதான தேவையற்ற பயத்தையும், அதுகுறித்த தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடும் பாத்திரப்படைப்பாக இருக்கிறாள்.
"பிரியாவின் முகக்கவசம்" ஆன்லைன் அனிமேஷன் தொடரை, அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக நிறுவனம் ரத்தபல்லாக்ஸ் நிறுவனரும், டாக்குமென்டரி படத்தயாரிப்பாளரும், தொழில்நுட்பவாதியுமான ராம்டேவினேனி உருவாக்கியுள்ளார்.
இதற்கான திரைக்கதையை சுப்ரா பிரகாஷ் எழுதியுள்ளார். இத்தொடர், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வட இந்திய அலுவலகத்தின் (NIO) ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்மென்டேட் ரியாலிட்டி (Augmented Reality) என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சித்திரக் கதை புத்தகம், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணியத் தலைவர்களான ரோசன்னா ஆர்க்குவெட், வித்யா பாலன், மிருனால் தாக்கூர், மற்றும் சாய்ரா கபீர் ஆகியோர் பேசியுள்ள அனிமேஷன் குறும்படமாக வெளியிடப்பட்டுள்ளது.
"உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியர்களும் அமெரிக்கர்களும் தங்களது திறமைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவதற்கு இந்த சித்திரக் கதை புத்தகம் இன்னொரு உதாரணம்," என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கோரி பிக்கெல் பெருமிதத்துடன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ராம் டேவினேனி உருவாக்கியுள்ள இந்த சித்திரக் கதை புத்தகம் தற்போது, தமிழ், கன்னடம், மற்றும் மலையாள மொழிகளைச் சேர்ந்த அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சிறுவர், சிறுமியர் வாசிக்க இயலும். கோவிட்-19 நோய்த்தொற்றுப்பரவலால் தனிமைப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் மற்றும் நோய்த்தொற்று குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடும் பிரியாவின் செயல்பாடுகள் குறித்து இந்த சித்திரக் கதை புத்தகம் பேசுகிறது."
ஜனவரி 24ம் தேதி, சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, தென்னிந்திய சமூக ஊடகப்பிரபலங்களான, கர்நாடகாவைச்சேர்ந்த சந்தன் ஷெட்டி (@chandanshettyofficial), கேரளாவைச்சேர்ந்த அபர்ணா மல்பெரி (@invertedcocounut), தமிழ்நாட்டைச் சேர்ந்த இர்ஃபான் மொகம்மத் (@irfansview) ஆகியோர், கோவிட்-19 நோய்த்தொற்று குறித்து தவறாகப்பரப்பப்படும் தகவல்களுக்கும், பயத்துக்கும் எதிரான பிரியாவின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். நீங்கள், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் (@usconsulatechennai) பின்தொடரலாம்.
"பிரியாவின் முகக்கவசம்" சித்திரக் கதை புத்தகத்தின் தமிழ், கன்னடம், மற்றும் மலையாளப் பதிப்புகளை, https://www.priyashakti.com/priyas-mask என்ற இணையதள முகவரியிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். அமெரிக்க தூதரகத்தின் பிராந்திய ஆங்கில மொழி அலுவலகம் (RELO) தயாரித்துள்ள இலவச ஆங்கில மொழிப்பயிற்சிப் பாடத்திட்டம் ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்களும், https://www.priyashakti.com/curriculum என்ற இணையதள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.